செவ்வாய், 8 செப்டம்பர், 2020

இலக்கியத்துறையின் ஒருபெண் ஆளுமை - பத்மா சோமகாந்தன்

செப்டம்பர் 08, 2020 0

சாதனைப் பெண்கள் பற்றி நூற்றுக்கு மேல் ஆற்றல், அறிவு குறித்த கட்டுரைகளை எழுதியவரும் 'ஈழத்து மாண்புறு மகளிர்', 'ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்' எனப் பெண்கள் பெருமையை நூல் வடிவில் கொணர்ந்தவரும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத்துறையில் அதிகமாக ஈடுபட்டு வருபவருமான ஈழத்து இலக்கியவாதி பத்மா சோமகாந்தனுடனான ஒரு கலந்துரையாடல்
பெண்ணாக இருந்தும் சிறுகதை கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் நீங்கள் காலடி பதிக்கக் காரணம் என்ன?
சிறுவயதிலிருந்தே பாடசாலையில் பாட்டு பேச்சு, இசை, எழுத்து, நடித்தல், நடனம் என்பவற்றில் அதிக ஆர்வமும் ஆசையும் கொஞ்சம் திறமையுமிருந்ததன் காரணமாக ஆசிரியர்களும் ஊக்கம்  தந்தனர். வீட்டுச் சூழலிலும் எனது தாயார் சகோதரிகள் யாவரும் ஓரளவு பாடுவார்கள். சினிமாவைப் பார்த்துவிட்டு ஊஞ்சலில் இருந்து ஆடியபடி வள்ளித் திருணம், சிந்தாமணி, சிவகாமி போன்ற பாடல்களில் வரும் வசனம், பாடல்களெல்லாம் அப்படியே ஒப்புவிப்பேன். இப்படியே பாடியும் பேசியும் நடித்து வந்த பழக்கத்தில் பாராட்டும் கிடைத்தால் சொல்லவா வேண்டும். ஆகவே இளமையிலிருந்தே இவற்றில் ஒரு சுவையும் சுகமும் தானாகவே ஏற்பட்டு விட்டது. என் ஆற்றலுக்ெகட்டியபடி இப்படித்தான் தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. 
பெண்கள் எழுத்துத் துறையில் முன்னேறுவதற்கு எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் என்று கருதுகின்ற இன்றைய காலக்கட்டத்திலே எழுதுவது ஒரு தவம் என்றும் குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு சிறந்த எழுத்தாளர்களாவதற்கென்று இயற்கையான ஆற்றல்கள் சிலருக்கு இயல்பாகவே இருக்கின்றது. அத்தோடு எழுத்துத் துறையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் என்று கூறும் பொழுது எழுத்தில் மட்டுமல்ல சகல துறைகளிலுமே பெண்களுக்கு சவால்கள் உண்டு. பொதுவாக ஒரு பரந்த உலகியல் அறிவு பெண்களுக்கு நிச்சயமாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு மாத்திரமல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டியது அவசியம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது அதிகமாக வாசிப்பது இலக்கியத்துறைக்கு ஒரு சக்தியாக அமையும்.

இன்றைய காலகட்டத்திலே பெண்களுக்கு  வாசிக்கக் கூடிய வாய்ப்புக்கள், நேரம், நல்ல சிந்தனையைத் தூண்டக் கூடிய நூல்கள், புதிய புதிய வரவுகள் குறைவாகவே கிடைக்கின்றது. பொதுவாக நாம் சிந்திப்போமேயானால்  ஒரு நூலகத்திற்குச் சென்று அங்கிருந்து வாசிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் பெண்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதற்கான நேரம் போக்குவரத்திற்கான வாய்ப்புக்கள் இப்படியான பிரச்சினைகள் பெண்களுக்கு நிறைய இருக்கின்றது. என்றாலும் வெளிவருகின்ற சில நல்ல நூல்களைப் பற்றி அறியவும் மிகச் சிறந்த எழுத்துக்களை வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களும் பெண்களுக்கு இல்லாது இருப்பதும் ஒரு சவால் என்று நாம் கருதலாம். 

வீட்டு வேலைகள் ஒரு சுமை. அதேநேரம் படித்த பெண்களாக இருந்தால், உத்தியோகம் பார்ப்பவர்களாக இருந்தால் அது அவர்களுக்கு வேலைச் சுமை. உத்தியோகத்திலே இருக்கின்ற வேலைகளை வீட்டிலே கொண்டு வந்து பார்க்கும் தேவைகள் சிலருக்கு இருக்கின்றது. அதே வேளையிலே வீடு, குடும்பம் என்று அவர்களுடைய எழுத்து சிந்தனை சிதைந்து போவதற்கான வாய்ப்புக்கள் ஆண்களை விட பெண்களுக்கு பெரிய சவாலாக அமைந்திருக்கின்றது என்பதை நான் இங்கே குறிப்பிட்டு தான் ஆக வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் தனியாக பல இடங்களுக்குச் சென்று அதாவது எழுத்துத் துறையில் கட்டாயமாக பயணம் செய்யும் அனுபவமும் அவர்களுக்கு மேலதிகமான அறிவைத் தரும் என்று நினைக்கின்றேன். ஆண்கள் நினைத்தவுடனேயே ஒரு இடத்துக்கு வசதியாக போய் வரக்கூடிய வாய்ப்புக்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் பெண்களுக்கு அவ்வாறான நினைத்த ஒரு இடத்திற்கு சென்று வரக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இலகுவாக ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்று என்னால் கருதமுடியவில்லை. இவையெல்லாம் கூட பெண்களுடைய எழுத்துத் துறையின் முன்னேற்றத்திற்கு சவாலாக அமைந்திருக்கிக்கின்றது என்று நான் கருதுகின்றேன். 
இலக்கியத்துறையில் இன்றைய பெண் தலை முறையினரும் அன்றைய பெண் தலைமுறையினரும் ஆற்றிய பாத்திரங்களின் வேறுபாடு என்ன?
ஆண் என்றால் முதன்மையானவன், மேலானவன்  பெண்ணென்றால் குறைவானவள் எதற்கும் அடங்கியொடுங்கிப் போக வேண்டியவள், பேதமை மிக்கவள் என்ற போக்கில் இன்றைய தலைமுறை பெண்களுக்கும் அன்றைய தலைமுறை பெண்களுக்கும் பாரிய இடைவெளி   இருக்கின்றதை நான் அவதானிக்கின்றேன். காரணம் அன்றைய பெண்கள் தியாகம் செய்பவர்களாகவும் விட்டுக் கொடுப்பவர்களாகவும் சுயமாகச் சிந்தித்துத் தானாகவே முடிவெடுக்கக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொண்டவளாக அன்றியும் எல்லாவற்றுக்கும் பிறர் கருத்தையே அனுசரித்து போகக் கூடியவர்களாகவும் மிகவும் கீழ்படியக் கூடியவர்களாகவும் தனக்ெகன வாழாது பிறருக்காகவே அதிகம் வாழ்ந்ததாக இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் இன்றைய பெண்கள் இப்படியானவர்களாக இருந்தால் இவர்கள் மரபையொட்டி வாழ்கின்றார்கள் என்று சொல்லக்கூடியதாக இருக்கின்றதேயன்றி இவர்கள் இன்றைய சூழலுக்கேற்ற பெண்களாக வாழ்கின்றார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அன்றைய நிலையிலிருந்து இன்றைய சூழல் மிகவும் வேறுபட்டிருக்கின்றது. இன்றைய சூழலிலே இப்படியான அக்காலப் பெண்கள் போல் இருந்தால் நாம் எதிலும் முன்னேற முடியாது. ஆகையினாலே இன்றைய பெண்கள் தனது சூழலையும் தன்னைப் பற்றிய எல்லா விடயங்களையும் கொஞ்சம் அறிவார்ந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. காரணம் அன்றைய பெண் வளர்க்கப்பட்ட விதம் பெரியவர்களோ, ஆண்களோ என்ன சொன்னாலும் தலை குனிந்து நடக்க வேண்டும். சரி பிழை சொல்வதற்கு அவளுக்கு இடமே இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய பெண் அப்படியல்ல. அவள் இளமையிலேயே கல்வி கற்று உலகத்தை, தனது குடும்பத்தை, பலரையும் புரிந்து கொண்டு வாழ்கின்ற ஒரு பெண்ணாகத்தான் இன்றைய பெண் காணப்படுகிறாள். எனவே இன்றைய பெண்ணுக்கும் அன்றைய பெண்ணுடைய போக்குக்கும் பல வித்தியாசங்களை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு காரணங்கள் இன்றைய பெண்கள் கல்வி கற்றிருக்கின்றாள். உலகியல் அறிவியலை ஓரளவாவது ஊடகங்கள் மூலம் அவள் அறிந்திருக்கின்றாள்.

ஆதலால் இன்றைக்கு ஏதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்துக் கேட்கக் கூடிய ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும், ஆற்றுலும், திறமையும் அவளிடம் வளர்ந்து வருவதை நாம் நிச்சயமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவே இன்றைய பெண்ணுக்கும் அன்றைய பெண்ணுக்கும் பாரிய இடைவெளி இருக்கின்றது என்று தான் நாம் கூற வேண்டும். இன்றைய நூல்கள், இலக்கியங்கள், ஊடகங்கள் எல்லாமே இன்றைய பெண்களின் வளர்ச்சியை நோக்கியே தான் தங்களது செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கின்றதும் ஒரு காரணமாகும். எனவே அவர்களுடைய போக்கிலே பல மாறுதல்கள் இருக்கின்றதை நாம் அவதானிக்கின்றோம். 
ஒரு பெண்ணான நீங்கள் இத்துறையில் முகங்கொடுத்த சவால்கள் என்ன? 
எங்களுடைய சமூகத்துக்கு பெண்கள் கல்வி கற்பதும் வெளியே சென்று தொழில் பார்ப்பதும் விரும்பமில்லை தான். ஆனாலும் அயலில் உள்ளவர்களால் பெண் பிள்ளையை எதற்காக படிப்பிக்க வேண்டும்? உத்தியோகத்திற்கு அனுப்ப போகின்றீர்களா போன்ற கேள்விகளும் வரத்தான் செய்தன. எங்களுடைய காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதென்பது குடும்பத்துக்கு அவமரியாதை. பெண் உழைத்துச் சாப்பிடுவதா? என்ற வினா எங்கள் மத்தியில் மட்டுமல்ல பொதுவாகச் சமூகத்தின் மத்தியிலேயே பெண் கல்விக்கு எதிரான பாய்ச்சல்களும் ஏச்சுக்களும் சீறுவானங்களாக வெடித்துக் கிளம்பின.

உழைப்பென்றால் ஆண்கள் தான். பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று உழைக்கக் கூடாது. பெண்கள் வருமானத்தை அதாவது பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. பெண்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து உறுதியாகவே இருந்தது. அப்போது பெண்கள் உத்தியோகம் பார்ப்பதென்பது தரக் குறைவாகவும் அவமானமாகவும் தவறானதாகவும் கருதப்பட்டது.

அது மட்டுமல்லாது அக்காலத்தில் ஒரு பள்ளிக் கூடத்திற்கு அதிபராக வருவதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருந்தது. ஆனாலும் என்னை எதிர்த்து ஒரு உதவி ஆசிரியர் ஒருவர் தான் அதற்கு அதிபராக வரவேண்டும் என்ற ஆசையில் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை அதாவது அந்தப் பள்ளிக் கூடத்தில் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளும் படிக்கின்றனர் என்பதால் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மாதிரி பார்க்க மாட்டார். இதனால் பள்ளிக்கூடத்திற்கு ​ெபரிய பிரச்சினை வரும். அது மட்டுமல்லாது இவர் ஒரு பெண். இவர் மகா வித்தியாலயத்தை நடத்த மாட்டார். ஒரு பெண்ணால் இதை நடத்த முடியாது. ஏனென்றால் அங்கு மேல் வகுப்புகளில் ஆண் பிள்ளைகளும் கற்கின்றார்கள். இவர் எல்லாப் பிள்ளைகளையும் சமத்துவமாக பார்க்க மாட்டார் என்றெல்லாம் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை கடிதங்கள் மூலம் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் பிறகு எனக்கு அதை விட நல்ல பள்ளிக்கூடம் கிடைத்து அதற்கு அதிபராக நான் பணியாற்றினேன்.

ஆனாலும் நான் 40, 50 வருடங்களாக எது முற்போக்கு, யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு அழிய வேண்டும் என்றெல்லாம எவ்வளவு தூரம் பேசியும் எழுதியும் பாடுபட்டும் கூட என்னைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாமல் இப்படியெல்லாம் எழுதினார்களே இந்த முட்டாள்கள் என்று எனக்கு மிகவும் கவலையாகவே இருந்தது.​
உங்கள் ஆக்கங்களில் பெண்ணிய கருத்துக்களை அதிகம் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?
யாரை நோய் வருத்துகிறதோ அதிலிருந்து மீள அவர் மருந்தெடுக்க வேண்டும். அதேபோல் எங்கே பள்ளம் இருக்கிறதோ அதனை மட்டமாக சமமாக்குவதற்கு பள்ளம் நிரப்பப்பட வேண்டும். அப்படியே ஆண் பெண்ணென்ற சமமான இரு உயிரினங்களிடையேயும் நீதி சமத்துவமின்றி ஆணுக்ெகாரு நீதி பெண்ணுக்ெகாரு நீதி என்ற அநீதி அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தான் ஆண் பெண்ணுக்கிடையில் நிலவும் அசமத்துவ நிலை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் பெண்கள் தொடர்பான உரிமைளுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இன்றைய பெண் தலை  முறையினருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு பெண்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதில் ஒரு குறைபாடு இருக்கின்றது. ஒரு பெண் மாத்திரம் தனித்து இருக்காமல் சமுதாயத்திலே இடம்பெறுகின்ற தவறான காரியங்களை எடுத்துக் கூறுவதற்காக ஒரு பெண்கள் அமைப்பை இளம் பெண்கள் எல்லோருமாக சேர்ந்து அதாவது ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி என்ற அரசியல் ஆட்களை நெறிப்படுத்தக் கூடியதாக ஒரு முன்னணி இருந்தது.

அதேபோல் பெண்கள் முன்னணி என்று ஒரு முன்னணியை இவர்கள் அமைத்தால் பெண்களுக்கு நடைபெறுகின்ற அநீதிகளை தட்டிக் கேட்கக் கூடிய பலமாக தங்களுடைய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்கு இவர்கள் எல்லோரும் முன்னணியில் நின்று எம்மால் முடியும் என்ற எண்ணத்துடன் பாடுபட வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. அதை கட்டாயமாக இளம் பெண்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் பணிவாகவும் தயவாகவும் கேட்டுக் கொள்கின்றேன்.

பெண்கள் ஒன்றுபட்டு உழைத்தால் எந்த நல்ல காரியத்தையும் சாதிக்கலாம். அத்தகைய சக்தி பெண்களிடம் உண்டு. அதுமட்டுமல்லாது பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பெண்கள் தமது நேரத்தையும் காலத்தையும் வீணாக்காமல் நல்ல அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள் ஆகியோர்களின் நூல்களை அதிகமாக வாசிக்க வேண்டும். வாசித்து தங்களுடைய சிந்தனைகளையும், அறிவையும் அறிவுப் பரப்பையும் நிச்சயமாக அகலப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தோடு நீங்கள் இந்த சமுதாயத்துக்கு 'என்னால் என்ன செய்ய முடியும்' என்பதை பற்றியும் சிந்தித்து அதற்கான செயற்பாட்டில் இறங்கவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் எமது சமுதாயம் முன்னேறும்.

தினகரன் - 

பெண்கள் தமது உரிமை சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - உமாச்சந்திரா பிரகாஷ்

செப்டம்பர் 08, 2020 1
  2020 பொதுத் தேர்தல்  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீழ்ச்சி 
 ஒரு நோக்கு 

மாச்சந்திரா பிரகாஷ் நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர். 2018 தொடக்கம் அரசியலில் ஈடுபடும் இவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் மேல் மாகாண சபை முதலமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டு, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டவர். நடந்து முடிந்த தேர்தலில் இழக்கப்பட்ட பெண் பிரதிநிதித்துவம் மற்றும் அது தொடர்பான காரண காரியங்கள், நடைமுறை அரசியல் நிலைமைகள் தொடர்பில் மீண்டெழுவுக்கு வழங்கிய கலந்துரையாடலில்,....
?பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், பெண்களின் வெற்றி மேலும் பலவீனப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?  
இலங்கை சனத்தொகையில் 52% இற்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட பெண்கள் தங்கள் வாக்குகளை அதிகமாக ஆண்களுக்கே வழங்கியுள்ளார்கள். வாக்களிப்பு என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை. அதை நாம் மதிக்கிறோம். ஆயினும் தாங்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஆண்கள், பெண்கள் உரிமை சார்ந்தும், பெண்களின் அடிப்படை விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவார்களா? என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். அத்துடன் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ‘அவளுக்கு ஒரு வாக்கு’ செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், அதனால் பெரிய மாற்றத்தை பெண்கள் மத்தியில் கொண்டுவர முடியவில்லை.  
?நீங்கள் சார்ந்த கட்சியில் பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டம் உண்டா? நீங்கள் அதில் திருப்திபடுகிறீர்களா?  
இலங்கையில் உள்ள தேசியக் கட்சிகளின் கட்டமைப்பைப் பொறுத்த வரையில், ஏனைய கட்சிகளை விட பெண்கள் அணி வலுவூட்டப்பட்டதாக இருப்பது வழமை ஆகும். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக பெண்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டங்கள் சிலவற்றை நாம் முன்னெடுத்து வருகிறோம். ஆயினும் தமிழ் பேசும் பெண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் அரசியலுக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது. ஆகவே ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக தமிழ் பேசும் பெண்களின் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன்.   
?அரசியலில் பங்குபற்றுவதில் தமிழ்ப் பெண்களுக்கு பிரத்தியேக சிக்கல்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?அது தொடர்பான உங்கள் கருத்து.  
கலாசார ரீதியான விடயங்கள் அவற்றுள் முக்கியமானவையாகும். தமிழ் - முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், ஆரம்ப காலங்களில் இருந்த வாழ்வியலுக்கும் தற்போது உள்ள வாழ்வியலுக்கும் இடையில் கல்வி மூலமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வளவு படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? திருமணம், குடும்பம் மற்றும் குழந்தை என்றிருந்த தமிழ் பேசும் பெண்களின் நிலைமை தற்போது மாற்றம் அடைந்துள்ளது. குடும்பப் பொறுப்புக்களுடன் பல்துறை ஆளுமை மிக்கவர்களாக அவர்கள் விளங்குகிறார்கள். ஆயினும் பல்துறைகளில் உள்ள உயரிய ஆசனங்களை அலங்கரிக்கும் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு மாத்திரம் தயக்கம் காட்டுகிறார்கள். அதற்கான காரணங்கள் பல உள்ளன. இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, அடிதடி மற்றும் இன்னோரன்ன பல விடயங்களை முக்கியமாகப் பார்க்கலாம்.   
?பெண் வாக்காளர்களின் வாக்களிப்பதற்கான விருப்பம் குறைந்ததற்கான காரணம்?  
பெண் வாக்காளர்களிடம் மாத்திரம் அல்ல, ஆண் வாக்காளர்களிடமும் வாக்களிப்பதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், வாக்களிப்பதால் என்ன நடந்து விடப்போகிறது என்ற சலிப்புத்தன்மையே ஆகும்.  
?இத்தேர்தலில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சாவால்கள் எவை?  
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், அனைத்து வேட்பாளர்களைப் போன்று பல சவால்களுக்கு நான் முகம் கொடுத்தேன். மேலதிகமாக பெண் வேட்பாளர்கள் பல சவால்களை சந்தித்தனர். அதிலும் தமிழ் பேசும் பெண்களுக்கு கலாசார வளர்ப்புடன் கூடிய பல சவால்கள் ஏற்பட்டன. அவ்வாறான பல சவால்கள் எனக்கு கட்சிக்குள்ளிருந்தும் வெளியில் இருந்தும் ஏற்பட்டன. உதாரணமாக, கூட்டங்களில் கட்சித் தலைவருக்கு அருகில் அமர்வது கூட விமர்சனக் கண்களோடு பார்க்கப்பட்டது. மொத்தத்தில் ‘அரசியலில் பெண்களுக்கான சவால்கள்’ என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதலாம். ஆயினும் கட்சித் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையும் குடும்பத்தினரின் அனுசரணையும் தேர்தல் காட்டாற்றில் நின்று பிடிப்பதற்கு உதவி புரிந்தன.  
?தேர்தல் முடிவுகளில் இருந்து பெண்ணாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?  
ஒரே ஒரு விடயம்தான். மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ வெற்றி - தோல்விக்கு அப்பால் எனது அரசியல் பயணம் தொடரும். அதை இந்த தேர்தல் இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது.  
?நீங்கள் வெற்றிபெறாத சூழலில் தேர்தலுக்குப் பின்னர் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?  
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக தமிழ் பேசும் பெண்களின் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன். மேலதிகமாக கட்சி வரம்புகளுக்கு அப்பால் பெண்களின் அரசியல் வகிபாகத்திற்கு என்னால் முடிந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.  
?நீங்கள் வெற்றி அடைந்திருந்தால் இந்த நிலைமையை மாற்றுவதில் எத்தகைய வேலைத்திட்டத்தை முன்னிருத்தியிருப்பீர்கள்?  
வெற்றி - தோல்விக்கு அப்பால் பெண்களின் அரசியல் வகிபாகத்திற்கு என்னால் முடிந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். ஆயினும் வெற்றி பெற்றிருந்தால், சட்டங்கள் இயற்றப்படும் பாராளுமன்றத்தில் இருந்து பெண்களுக்கான அரசியல் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்திருப்பேன்.  
?பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.உங்கள் கண்ணோட்டத்தில்,...  
பெண்களின் பிரச்சினைகளை பெண்களே நன்கறிந்தவர்கள். மேலதிகமாக ஆண் - பெண் சமத்துவம் கொண்ட அரசியல் என்பது சம எடை கொண்ட தராசு போன்றது. ஆகவே நடுநிலைமை கொண்ட ஆட்சி இடம்பெற வேண்டும் என்றால், ஏனைய துறைகளைப் போன்று பெண்கள் வகிபாகம் அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டும். 


பெண்கள் எதையும் கெஞ்சிப்பெற வேண்டியதில்லை - பேரியல் அஷ்ரப்

செப்டம்பர் 08, 2020 0

பேரியல் அஷ்ரப் என்ற பெண் ஆளுமையை யாரும்  மறந்திருக்கமாட்டார்கள். இவர் பல அமைச்சு  பதவிகளை வகித்தவர். சிறுபான்மையினரின்  பெண் தலைமைத்துவத்தின் முன்னோடி எனலாம்.  நாம் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்களுக்கு ஒரு நேர்காணலுக்கான நேரத்தை   துக்கி தருமாறு கேட்டோம். நான் என்ன சொல்லப்போகிறேன், ஓய்வில் இருக்கும் என்னிடம் எதைப்பற்றி கலந்துரையாடுவது என்று மறுத்தார்.  எமது விடாப்பிடியால் ஒப்புக்கொண்ட அவர் தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு  விடுத்தார். நாம் அங்கு சென்றவேளை அரசியலை தவிர்த்து பெண்ணியம் தொடர்பான ஓர் ஆழ்ந்த சம்பாஷனையின் போது அவரின் கருத்துக்கள் சில...
உங்களது அரசியல் பிரவேசமும் பின்னணியும்?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எமது வீட்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் எமது வீட்டிலேயே கட்சியின் சகல நடவடிக்கைகளும் நடந்தன. அப்போது அங்கு வரும் உறுப்பினர்களுக்கு தேனீர், சமையல் செய்து  கொடுப்பது என் வேலை.  வீட்டில்  மனைவிக்கு என்றொரு இடம் ஒதுக்கப்படும். அதற்குரிய கடமையையே நானும் செய்தேன். கட்சி பெரும் விருட்சமாக வளர்ந்து இருக்கும்போது என் கணவரின் திடீர் மறைவால் கட்சியில் உள்ளவர்கள் அடுத்து என்ன செய்வது என்று  திண்டாடினர். அப்போது கட்சியில் இருந்த சில உறுப்பினர்கள் என்னை தற்காலிகமாக தலைமை பதவிக்கு நியமிக்க தீர்மானித்தனர். அவ்வேளையில், அதில் சில உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணுக்கு  எப்படி தலைமையை வழங்குவது, எங்களில் யாரும் இல்லையா? என ஒரு குழு பிரிவினையை ஏற்படுத்தியது. அப்பிரிவினையில் என்னை விரும்பியவர்கள் எனக்கு கட்டாயம் தலைமையை வழங்க வேண்டும் என்ற கடைசி தீர்மானத்திலேயே எனக்கு வழங்கப்பட்டது. ஆகவே என் அரசியல் பிரவேசமே ஒரு சாராரின் எதிர்ப்பிலேயே ஆரம்பமானது. பேரியல் அஷ்ரப் என்ற பெண்ணை நம்பி, இவளால் முடியும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பொறுப்பு தரப்பட்டவில்லை என்று நான் நினைக்கிறேன். அத்தோடு எமது நாட்டில் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு நிறைய முன்னுதாரணம் இருக்கின்றன.

பண்டார நாயக்கவின் மறைவின் பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமை சிறந்ததாக அமைந்தது. ஆனால் அவரின் பிரவேசம் கட்சியின் அனைவரின் விருப்பத்துடன் நடைபெற்றது. என் பிரவேசம் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்தவில்லையெனலாம். 
பெண் தலைமைத்துவம் தொடர்பான உங்களின் நிலைப்பாடு?
பெண் தலைமைத்துவம் ஏற்றுக்ெகாள்ளப்படாத ஒரு பேசு பொருளாகவே இருக்கின்றன. ஒரு பெண்ணுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம், இவளால் செய்ய முடியும் திறமைசாலி என்ற எண்ணப்பாடு இன்னும் ஆண்கள் மத்தியில் மட்டுமல்ல சில பெண்களின் மனதில் கூட இல்லை. இதுவே யதார்த்தமாகும். நாம் உலகத்துக்கு முதல் பெண் பிரதமரை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆனால் அதன் பிற்பாடு யாரும் வரவில்லை. சந்திரிகா அழைத்து வரப்பட்டார் ஏன்? சுதந்திரக் கட்சி அதல பாதாளத்தில் இருந்த போது கட்சியில் உள்ளவர்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கு அவரின் தலைமைத்துவம் தேவைப்பட்டது. அதேபோல், தமிழ் தரப்பிலும் யாருமில்லை. ஆகையால் முஸ்லிம் தரப்பில் நான் வந்தது மிகப்பெரிய விடயமாக கருதவேண்டியுள்ளது. அதுவும் பத்து வருடங்களாக அரசியலில் நிலைத்து நின்றதும் எமது மக்களின் முழுமையான ஆதரவால் மட்டுமல்ல எனலாம். நான் பெண் என்பதாலே என்னவோ என் தலைமையை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. 
பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியம் என்ன? ஏன்? எதற்காக? நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
தற்போது பெண் பிரதிநிதித்துவம் பற்றி பல கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு 25% பங்களிப்பு வழங்க வேண்டும். நாம் கேட்கும்போது நாங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஏனென்றால், நாம் ஒருவரிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்கும் போது அவருக்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு நியதி. அந்நிலையில், எங்கள் மனதில் இருக்கும் தைரியமும் சிறிது குறைந்தது போல் ஓர் உணர்வு. நீங்கள் 100 வீதம் வைத்திருக்கிறீர்கள் எங்களுக்கு 25வீதம் தாருங்கள் என்று இறைஞ்சுவது போல் இருக்கிறது. இது எமது உரிமை. 100வீதத்தில்  அரைப் பாதி எங்களுடையது. அதை நாம் எடுக்க முயற்சிக்க வேண்டும். அதற்கான நடைமுறை சாத்தியமான விடயங்களை ஆராயவேண்டும். எங்களுக்கு 25% பிரதிநிதித்துவம் தாருங்கள் என்று கேட்டால் தருகிறோம், பட்டியலில் போடுகிறேன் வெற்றிபெற்று வாருங்கள் என்பர். அப்போது எங்களுக்கு வாக்களிப்பார்களா? இல்லை. புதிய பெண் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதில் விசேடத்துவம் என்னவென்றால் பெண்களே பெண்களை விரும்புவதில்லை. இவளுக்கென்ன வேலை வீட்டில் இருக்கும் வேலைகளை விட்டு விட்டு இவளுக்குத் அரசியல் தேவை தானா என்பார்கள்.
ஒரு முஸ்லிம் பெண் தலைவி என்ற வகையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசத்தை அதிகரிக்க ​நீங்கள் கூறும் அறிவுரை? 
முதலில் பெண்ணின் அருமை பெருமையை அவளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இயற்கையிலே யே பெண்கள் திறமைசாளிகள். அது கடவுள் தந்த வரமாகும். அவள் செய்யும் சேவையின், வீட்டு முகாமைத்துவத்தின் திறமையை அதன் தாற்பரியத்தை விளங்கப்படுத்த வேண்டும். வீட்டின் முகாமைத்துவத்தை நடத்தும் நீ, நாட்டின் முகாமைக்கு உன் பங்களிப்பு என்ன? நாட்டின் நிதி முகாமைத்துவத்தில்  எவ்வாறு நீ பங்களிப்பு செய்ய முடியும் என்பதை சாதாரண பெண்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். நான் படியாதவள் எனக்கு என்ன தெரியும் என்று புலம்பும் பெண்ணின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வீட்டின் கணவர் தரும் பணத்தில் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் செய்யும் நீ வீட்டு முகாமைத்துவத்தின் முகாமையாளர். ஒவ்வொரு ஆணுக்கும் தெரியும் தன் மனைவி அவனை விட திறமைசாலி என்று. அந்த பயம் ஆண்களிடம் இருக்கிறது. நாங்கள் ஏன் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற தகவல் சாதாரண பெண்களிடம் சென்றடையவில்லை. அவள் செய்யும் தொழிலின் தாற்பரியம், முக்கியத்துவம் அவளுக்கு விளங்கப்படுத்தப்படவில்லை. நாம் இரண்டாம் பட்சமாக நின்று உரிமைகளை கேட்பதை விட்டு விட்டு எமது பங்கை நாம் அனுபவிக்க வேண்டும். அப்போது தானாக பெண்களின் மனதில் மாற்றம் நிலவும். 
உங்கள் பார்வையில் ஆண் பெண் சமத்துவம் எவ்வாறு பேணப்படுகிறது?
இதில் கூட ஆணுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. இவ் வாக்கியத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் அற்றுப்போயுள்ளது. சகல துறைகளிலும் ஒரு பெண்ணை தவறாக நோக்கும் எண்ணக்கருவில் மாற்றம் ஏற்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நோக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு பிழையான சம்பவத்தை கண்டால் இவள் என்று தொடங்கி இல்லாத பொல்லாததெல்லாம் கதைப்பார்கள். அதன் உண்மைத் தன்மையை அறிய முற்படுவதில்லை. அவள் ஏன் அப்படி செய்தாள் எதற்காக என்ன காரணத்துக்காக இதை செய்கிறாள் என்று எண்ணுவதை விட்டு விட்டு, வசைபாட தொடங்கிவிடுவார்கள். முதலில் அவளும் ஒரு மனிதப் பிறவி என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் உன்னுள் ஒருவர் என்ற மனித மனப்பான்மை மதிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்ணின் இயற்கையான மென்மைக்கு இடம் கிடைக்கும்.

தினகரன் - 04.06.2017

பெண்தான் பெண்ணியம் பேசவேண்டும் என்பதல்ல! - அனுதர்ஷி லிங்கநாதன்

செப்டம்பர் 08, 2020 0

சென்னை பூவரசி அறக்கட்டளை பூவரசி நிறுவனங்கள் வழங்கும் பூவரசி விருதுகளில் பெண் ஆளுமைக்கான விருதுக்கு அனுதர்ஷி லிங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கை  உதவி விரிவுரையாளராகவும், சுதந்திர  ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  அவருடன் மனம் திறந்த கலந்துரையாடல்... 
பூவரசி அறக்கட்டளை பூவரசி ஊடக நிறுவனம் வழங்கும் பூவரசி பெண் ஆளுமை விருதுக்காக உங்களை  தெரிவு செய்ததற்கான காரணம் என்ன?
நான் ஓர் சுதந்திர ஊடகவியலாளராக யுத்தத்தின் பின்னும் முன்னும் எனது தனிப்பட்ட கோணத்திலான படைப்புக்களை பெண்கள் சார்ந்ததாகவும் சமூகப் பிரச்சினைகள் சார்ந்ததாகவும் எழுதி வருகிறேன். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களில் எனது சமுதாய நோக்கிலான பணிகளுக்காகவும் இவ் விருதுக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன். 
இவ் விருது ஊடகத்துறையில் எனக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது என நினைக்கிறேன்.
உங்களது ஊடக ஆர்வமும் எழுத்துத்துறை பிரவேசமும் பற்றி....?
பாடசாலைக் காலத்திலிருந்தே வாசிப்பின் மீதும் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது. நல்ல புத்தகங்கள் தான் என் தேடலுக்கான பதிலையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ஊடகவியலாளராக வர வேண்டும் என்பதுதான் எனது இலட்சியமாகவும் இருந்தது. எனது உயர் கல்வியைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கைகளைத் தெரிவு செய்து தொடர்ந்தேன். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமா, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் எனது தொழிற் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டேன். அதுவே எனது ஊடகப் பிரவேசமாக இருந்தது. தமிழ் தந்திப் பத்திரிகையில் ஊடகவியலாளராகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடகப் பிரிவுகளிலும் கடமையாற்றினேன். கட்டு மரம் ஊடகவலையமைப்பு போன்ற இணையதளங்களிலும் சுடர் ஒளி பத்திரிகையிலும் எழுதி வருகிறேன். தற்போது சுதந்திர ஊடகவியலாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றேன். அதுமட்டமல்லாது காண்பவற்றை ஆக்கபூர்வமான படைப்புக்களாக்கும் புகைப்படத்துறையிலும் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஊடகத்துறை கற்பித்தல் பற்றி?
விரிவுரையாளராக இருப்பது எனக்குப் பிடித்தமான விடயமாக இருக்கிறது. என்னை இந்தத் துறையில் மேலும் வளர்த்துக் கொள்ளவும் ஊடகத்துறையில் தொழிற் தேர்ச்சி பெற்ற சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கவும் முடியும் என நம்புகிறேன். அத்ேதாடு ஊடகக் கல்வியை சிறந்த முறையில் கற்கின்றவர்களால் தான் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க முடியும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை இன்று தடம்மாறி ஊடக தர்மத்தைக் காற்றில் பறக்க விடுவதாகவும் வன்முறைகளுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் சரியான ஊடகக் கல்வி இன்மையே. 
இலங்கையில் யாரும் ஊடகவியலாளராக இருக்கலாம் என்ற நிலையே தற்​ேபாது  காணப்படுகின்றது. நீங்கள் ஊடகத்துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டும் விடயதானம் (subject) எது? அதற்கான காரணம் என்ன?
நேர்காணல்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில் அதிகம் ஈடுபடுகின்றேன். அரச சார்பற்ற நிறுவனங்களில் வட மாகாணத்தில் பணியாற்றிய போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை உணர முடிந்தது. அதுமட்டுமல்லாமல் நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலேயே இருக்கிறேன். அதனால் அந்த மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறேன். அது பற்றி எனது கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள பிரச்சினைகளை நேரில் சென்றுஆய்வுகளைச் செய்திருக்கின்றேன். நேரில் பார்த்து, உணர்த்து, அவ் விடயங்களை அழமாக ஆய்வு செய்து பக்கச்சார்பற்று எழுதும் போதுதான் அது ஒரு சிறந்த ஊடகவியலாக இருக்க முடியும்.
ஊடகத்துறையில் ஒரு பெண்ணாக நீங்கள் முகங்கொடுக்கும் சவால்கள் என்ன?
ஊடகத்துறையில் உள்ள பெண்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தொழில் நிமித்தம் பயணப்படும் போது சில பிரச்சினைகளை எதிர்கொண்டேன். பொதுவாக பெண்கள் பிரயாணங்களின் போது பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பெண்கள் தனியான தொழில் ரீதியான பயணங்களையும் மேலதிக வேலை நேரத்தையும் பகுத்தறிவுடன் பார்க்கின்ற பக்குவம் எமது சமூகத்தில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு இல்லை. அச்சுறுத்தல்களை சில சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். எனது பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுகின்ற குடும்பத்தினரின் கருத்துக்களைஅலட்சியப்படுத்த முடியவில்லை.
இத் துறையில் நீங்கள் சாதித்த, மறக்க முடியாத விடயம் என்று எதை கருதுகிறீர்கள்?
இதுவரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் நான் எழுதியவற்றைப் புத்தகமாகவெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். நான் சார்ந்ததுறையில் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்குவதே எனது கனவு.
சமயம் கலாசாரம், பண்பாடு என்பதை  வைத்து பெண்களின் ஆளுமைகள் குறைவாக மதிக்கப்படுகின்றது. இதை பற்றி உங்கள் கருத்து?
சில சந்தர்ப்பங்களில் அப்படியிருக்கலாம். பெண்களை மாத்திரம் கலாசாரத்தின் காவலர்களாக காட்டுகின்றவர்களும், சில பிற்போக்கான சமூகக் கட்டமைப்பும் இதற்குக் காரணமாக இருக்கின்றது. மதம் காட்டும் புனிதபிம்பமும் சில சமயங்களுடைய கட்டுப்பாடுகளும் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்பது உண்மை. மூட நம்பிக்கைகள் ஒரு போதும் சட்டங்குகளாக முடியாது. பிற்போக்கான பாரம்பரியங்களையும் முட்டுக்கட்டைகளையும் தகர்த்து வெளிவர வேண்டும். தனி நபர் ஆளுமையை எதை வைத்தும் குறைவாக மதிப்பிட முடியாது.பெண்கள் தமக்கான சுயத்தை பல்வேறுபட்ட துறைகளிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக விடுதலை பற்றி பேசும் போது ஏன் பெண் விடுதலை முக்கியமானதாகிறது?
குடும்பத்தின் ஆதாரம் மட்டுமல்ல சமூகத்தின் ஆதாரமாகவும் பெண் இருக்கிறாள். பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சுற்றியிருக்கின்ற அனைவரையும் பாதிக்கும். மனிதவள ரீதியாக மட்டுமல்லாமல் அபிவிருத்தி ரீதியாகவும் நாடு முன்னேற்றமடைய பெண் விடுதலை அவசியம். பெண்ணுக்கு முக்கியத்துவமளிக்கின்ற ஒரு சமூகம் தான் மேம்பட முடியும். சமூகத்தின் பெயராலேயே பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள்.பெண்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும். ஒரு சமூகத்தில் இருக்கின்ற ஆண்,பெண் இருவரும் இணைந்துதான் சமூக விடுதலைக்காகச் செயற்பட  முடியும். பெண் விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தால் தான் முற்போக்கான ஒரு சந்ததியை உருவாக்க முடியும். 'நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்'
இன்றைய காலக்கட்டத்தில் பெண் ஆளுமைகளின் தேவை எவ்வாறிருக்கிறது?
இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல், ஊடகம், நீதித்துறை போன்ற துறைகளில் குறைந்தளவான பெண்களே பிரகாசித்திருக்கிறார்கள். இது போன்ற துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். குடும்பம்,தொழில் என்ற இரட்டைச் சுமை பெண்களின் முன்னேற்றத்தைப் பின் தள்ளுவதுடன் சில துறைகளை மாத்திரமே தமக்கானதாகத் தீர்மானிக்கவும் காரணமாகின்றது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான இலட்சியத்தை தானே தெரிவு செய்வதன் மூலம் தனக்கான சுயத்தை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். எமது சமூகத்தில் அறிவுபூர்வமான முற்போக்குத் தனமான பெண் ஆளுமைகள் மேலும் உருவாக வேண்டும்.
நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள்  சமமாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
இல்லை, ஒவ்வொரு பெண்ணும் வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கிறார்கள். சமூகத்தின் சில சூழ்நிலைகளில் பால் நிலை சமமின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக யதார்த்தத்தில் பெண்களின் நிலைப்பாடு தந்தை வழிச் சமூகத்தின் நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருக்கின்றது. உடல் சார்ந்த பாலியல் தாக்குதல்களையும் பெண் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெண்களின் கருத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள் பால் சார்ந்த அவதூறுகளைப் பிரயோகிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இது தொடர்பில் பலராலும் பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்த போதிலும் மாற்றமொன்றுக்கான அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்றே கூற வேண்டும்.
இன்றைய பெண்கள் ஆணாதிக்கத்தில் இன்னமும் அடிமைப்படுத்தப்படுகின்றனரா? பெண்ணியம் பேச வேண்டிய காலத்தில் தான் இன்னமும் வாழ்கிறோமோ? 
ஆம், சமூகத்தின் சில படி நிலைகளில் இன்னமும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இது உலகின் பொதுப் பிரச்சினையாகவும் இருக்கின்றது. பெண் என்பதற்கான பாரம்பரியக் கருத்தியல்கள் மாற்றமடைய வேண்டும். பெண்களை அடிமைப்படுத்துபவர்களாக ஆண்கள் மட்டுந்தான் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. தெளிவான பெண் எழுத்து என்பது சமூகச் செயற்பாடுகள் மற்றும் பெண்களுடைய உரிமைகள் குறித்து பேசுவதற்கான வலிமைமிக்க ஆயுதம். எனவே சமூகத்தில் அடிமைப்படுத்தப்படும் பெண்களுடைய பிரச்சினைகளை பேச வேண்டியது காலத்தின் தேவை. அதன் மூலம் பாரபட்சங்களுக்கெதிரான மாற்றமொன்றை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஆனால் நான் சுதந்திரமான ஒரு பெண்ணாகவே உணர்கிறேன். நான் சார்ந்த மூகம் எனக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழிகாட்டியிருக்கின்றது. எனது குடும்பம் குறிப்பாக எனது மாமனார் சத்தியநாதன் தான் என் கல்விக்கு அடித்தளம் இட்டவர். அவர் உயிரோடு இல்லாத போதும் தன்னம்பிக்கையுள்ளவளாய் என்னை உருவாக்கிய அவரை நான் என்றும் நினைவு கூருவதுண்டு. 
பொதுவாக பெண் எழுத்தாளர் என்றாலே நினைவுக்கு வருவது பெண்ணியம் தான். அவர்களது எழுத்துகள் பெரும்பாலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியே பேசிக் கொண்டுள்ளன. இந்த நவீன உலகில் பெண்கள், ஆண்கள் எனப் பிரித்துப் பேசுவது பொருந்துமா? 
பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பெண்ணியம் பற்றி மாத்திரமே பேசவில்லை. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பட்ட விடயங்களைப் பேசக் கூடிய பரந்துபட்ட அறிவு பெண்களுக்கு இருக்கிறது. ஆண்களை விடப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இந்த நவீன உலகில் கூட பெண்கள் நாளாந்தம் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள்.போரினால் பாதிக்கப்பட்டபெண்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பெண்களுடைய பிரச்சினைகளை பெண்களால் தான் ஆழமாக அணுக முடியும். அதனால் பெண்களுடைய பிரச்சினைகள் பெண் எழுத்தாளர்களால் தான் அதிகம் பேசப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல. பெண்தான் பெண்ணியம் பேசவேண்டும் என்பதும் அல்ல. ஆண் எழுத்தாளர்களில் பெண்ணியம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆண்களுடைய பிரச்சினைகளைப் பெண்கள் பேச வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது.
ஊடக பெண் ஆளுமையில் தேசிய பத்திரிகைகளில் பெண் பிரதம ஆசிரியரின் தேவை உணரப்பட்டுள்ளதா?
நிச்சயமாக பெண் பிரதம ஆசிரியரின் தேவை உணரப்பட வேண்டியது அவசியம். பால் நிலைச் சமத்துவம் ஊடகத்துறையில்  பேணப்பட வேண்டும். எனது பல்கலைக்கழக ஆய்வொன்றை இவ்விடயம் தொடர்பில் மேற்கொண்டிருந்தேன். இலங்கையின் ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் பெண் பிரதம ஆசிரியர்களாக ஒரு சிலரே இருந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது.மேலும் ஊடகத்துறையை பெண்கள் தெரிவு செய்வதும் குறைவாக உள்ளது. பெண்கள் ஊடகத் துறையில் தொழிற் தேர்ச்சி பெறுவதுடன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தினகரன் - அனுதர்ஷினி லிங்கநாதன்

பாலின வேறுபாட்டை மறந்து பதவிகளை கைப்பற்றுங்கள்! - ஷம்ஸூன் நஹார் ஜெமீல்

செப்டம்பர் 08, 2020 0

ஒரு சமூகத்தின் உயர்ச்சியை கல்வி கற்றவர்களின் விகிதாசாரமே எடுத்துக் காட்டும் காரணியாகும்.​ ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கற்பதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டது. அதை மீறி கற்றாலும் தொழில் செய்வதற்கு தடை போடும் பெற்றோர்கள். இவற்றையெல்லாம் தாண்டி  கற்ற கல்வியால் தன்  பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு போராடிய பெண்மணியே ஷம்ஸூன் நஹார் ஜெமீல் மரிக்கார் ஆவார். இவர் பேருவளையின் முதல் பெண் ஆசிரியரும் பிரதி அதிபருமாவார். 1958ம் ஆண்டு முதல் பெண் ஆசிரியராக நியமனம் பெற்றுக் கொண்டவர். தான் விண்ணப்பித்த ஆசிரியர் நியமனம் தனக்கு வழங்கப்படவில்லை என்று அன்று அவர் முன்னெடுத்த செயற்பாட்டால் படித்த இளைஞர், யுவதிகளுக்கு அந்தந்த ஊர்களிலேயே ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென அப்போதைய கல்வி அமைச்சரான தஹநாயக்க வழங்கிய பணிப்பு இன்று ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கான முன்னெடுப்புகளை செய்த ஷம்ஸூன் நஹார் ஜெமீல் மரிக்காரையும் அறிந்திருக்கமாட்டார்கள்.  நாம் அவரை அவரது வீட்டில் சந்தித்து போராட்டத்தின் சில பக்கங்களை 'மீண்டெழு'  பக்கத்துக்காக மீட்டிப் பார்த்தோம்.
கேள்வி : பேருவளையில் முதல் ஆங்கில ஆசிரியரான நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான சம்பவம் மற்றும் தோல்விகளை பற்றி?
வெற்றி என்றால் எனக்கு கிடைத்த முதல் ஆசிரியர் நியமனம் தான். ஆனால் நான் அதற்காக விண்ணப்பித்த போது எனக்கு தகுதியிருந்தும் யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்கு வழங்கியது என் மனதை தோல்வியில் துவள வைத்தது. பின்னர் அது பெரும் போராட்டமாகவும் உருவெடுத்தது. எனது அண்ணா சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த விடயம் மிகவும் கவலையையும் அவர் மனதை பாதிப்படையவும் செய்தது. ஏனென்றால் தகுதிகள் இருந்தும் அப்பதவி எனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்.

பிறகு என் அண்ணா அவருடன் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வெளிமடை தொகுதி எம்.பியாக இருந்த கே.எம்.டி இராஜரட்ணவிடம் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராகவும் இருந்தவர்.  அப்போது அவர் எங்களை அமைச்சர் தஹநாயக்கவிடம் அழைத்துச் சென்றார்.  தஹநாயக்கவிடம் சென்று இவ் விடயமாக பேசும் போது சாய்வாக அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து ஆச்சரியத்துடன் எங்கள் பிரச்சினையை செவி மடுத்தார். அக்கணமே கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு 'அந்த பெண் கேட்ட அந் நியமனத்துக்கு இன்றே அவரை நியமிக்கவும்' என்று கூறியுள்ளார். அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆசிரியரை அவரின் ஊருக்கே மாற்றுமாறும் பணிப்பித்துள்ளார். அதே நாள் ஒரு முக்கியமான திருப்பு முனையும் ஏற்பட்டது. அந்தந்த ஊர்களில் படித்து முடித்த முஸ்லிம் பிள்ளைகளுக்கு அவ் ஊர் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய  வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குமாறும் ஓர் பணிப்புரையை வழங்கினார். இது முஸ்லிம்களுக்கு தஹாநாயக்க செய்த பெரும் சேவையாகும். 

இது என்னால்  படித்த முஸ்லிம் பிள்ளைகளுக்கு கிடைத்த பெரும் சேவையாகவும் அர்ப்பணிப்பாகவும் கருதுகிறேன். இதனால் அக்காலத்தில் படித்த முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு அந்ததந்த ஊர்களிலேயே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அப்போது இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அதை எதிர்த்தனர். ஏனென்றால் பயிற்றப்படாத ஆசிரியர்களை நியமிப்பதால் பாடசாலையின் கல்வித் தரம் குறையும் என்று கூறினர். ஆனால் அது நடக்கவில்லை. 
​கேள்வி: உங்களின் பள்ளி வாழ்க்கை பற்றி...?
அக்காலத்தில் பேருவளையில் ஒரு பெண்கள் பாடசாலை மாத்திரமே இருந்தது. அதுவும் தரம் 5 வரை தான். ஏனென்றால் பெண்கள் பூப்பெய்திய பின்னர் பெற்றோர்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுமதிக்காது இடையிலேயே நிறுத்திவிடுவார்கள். அதன் பின்னர் 1947ல் ஒரு ஆங்கில பாடசாலை சைனாபோட் ஜுனியர் ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் தரம் எட்டு வரை மட்டுமே இருந்தது. 8ம் தரம் வரும் போது நிறைய பெண் பிள்ளைகள் விலகி சென்று விட்டனர்.  தரம் எட்டில் நான் மட்டுமே ஒரே ஒரு பெண் பிள்ளை. அதுவும் நான் பூப்பெய்துவதற்கு காலம் சென்றதால் எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனலாம். ஆனால் அந்த பாடசாலையில் தரம் 8 வரை தான் இருந்தது. நான் நன்றாக படிப்பதால் எனது அம்மா அப்பாவிடம், மகள் நன்றாக படிக்கிறாள், அதனால் தொடர்ந்தும் படிக்க விடுவோம் என்று சொன்ன பிறகு அப்பா என்னை தர்கா டவுனில் உள்ள பாடசாலையில் சேர்த்தார். நான் அங்கு படித்து ஆங்கில மொழியில் எஸ்.எஸ்.சி. (அக்காலத்தில் க.பொ.த. சாதாரண தரம்) பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். பேருவளையில் பொது பரீட்சை ஒன்றில் சித்தியடைந்த முதல் பெண் பிள்ளை என்ற பெருமையும் அக்காலத்தில் எனக்கு கிடைத்தது. 

இவ்வளவு படித்ததும் தொழில் செய்வதற்காக அல்ல. அக்காலத்தில் பெண்கள் அதுவும் முஸ்லிம் பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் பயம். அதுவும் என் அம்மா விருப்பமில்லை. அதன் பிறகு சைனாபோட் ஜூனியர் பாடசாலையிலிருந்து ஒரு ஆங்கில ஆசிரியருக்கான வெற்றிடம் உள்ளது என்று அறிவித்தனர். அக்காலத்தில் பரீட்சைகள் ஒன்றும் கிடையாது. ஒவ்வொன்றாக தான் நியமனங்கள் வழங்கப்படும். எனக்காக ஒரு விண்ணப்பப்படிவத்தை  என் அண்ணா சட்டக் கல்லூரி மாணவன் ஏ.ஜே.எம்.டஸூரிடம் கொடுத்தார். அவர் அதை  கொம்பனிதெருவிலுள்ள கல்வி திணைக்களத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்நியமனம் எனக்கு கிடைக்காமல் யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்ேக வழங்கப்பட்டது. 
கேள்வி: உங்கள் ஆசிரியர் பணி செய்யும் காலத்தில் நடந்த சம்பவங்கள்? 
நான் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 1958ம் ஆண்டு பயிற்சிக்காக கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு சென்றேன். அதன் பிறகு சைனாபோட் கீழ்நிலை பள்ளி மழைக்கு உடைந்து விட்டது. பின்னர் அல்-ஹுமைசரா ஆண்கள் பாடசாலையில் பகல் நேர வகுப்புகள் பெண்களுக்காக நடத்தப்பட்டது. அதன் பிறகு அக் காணி ஆண்கள் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. அக்காலத்தில் களுத்துறை தொகுதி எம்.பியாக இருந்த சம்லி குணவர்தன தான் பெண்கள் பாடசாலையை மீள  கட்டியெழுப்பினார். அதற்கான காணியை சாலிஹாஜியார் வழங்கினார். எனது பயிற்சி முடிய மீண்டும் 1959ம் ஆண்டு அதே பெண்கள் பாடசாலைக்கு எனக்கு நியமனம் கிடைத்தது. நான் வந்த பிறகு படிப்படியாக 7ம் வகுப்பில் தொடங்கி க.பொ.த. சாதாரண தரம் வரை அப் பாடசாலை வளர்ந்து சென்றது. 1962 ம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு 5 பிள்ளைகள் தோற்றினார்கள். அதில் 4 பெண்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார்கள். அதில் என் மகளும் இருந்தாள். எமது பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்தாலும் அந்த காலத்தில் பாடசாலைக்கு சிற்றூழியரோ, பாதுகாப்பு உத்தியோகத்தரோ இல்லை எல்லா வேலைகளையும் ஆசிரியர்களே செய்து கொள்ள வேண்டும்.
கேள்வி: பொது பணித்துறையில் உங்கள் ஈடுபாடு?
1976ம் ஆண்டு சைனாபோட் பெண்கள் எல்லோரும் சேர்ந்து 'சைனாபோட் முன்னேற்ற பெண்கள் அமைப்பை' ஆரம்பித்தோம். அதில் நான்தான் தலைவியாக செயற்பட்டேன். அப்போது எமது பெண்கள் பாடசாலைக்கு இடவசதி போதவில்லை. நான் எங்கள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடினேன். அப்போது எல்லோரும் பணம் சேர்த்து இருமாடி கட்டிடத்தை கட்டி கொடுக்க தீர்மானித்தோம். அக்காலத்தில் இரு மாடிக் கட்டிடங்களை கட்டுவதற்கு 5,000 ரூபா இருந்தாலும் போதும். அப்போது பணமும் சேகரிக்கப்பட்டது. கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை நானே வடிவமைத்து கல்வி திணைக்களத்துக்கு அனுமதி பெற அனுப்பி வைத்தேன். கல்வி திணைக்களத்திலுள்ள வடிவமைப்பாளரும் அதில் சிறு மாற்றங்களை செய்து அதற்கான அனுமதியும் வழங்கியிருந்தார். சைனாபோட் வை.எம்.எம்.ஏ. தாங்கள் அதை செய்வதாக பொறுப்பேற்றது. இன்று இருக்கும் அந்த இரண்டு மாடி கட்டிடம் நான் வடிவமைத்ததேயாகும். அத்தோடு எமது அமைப்பால் சமையல் வகுப்புகள், சுயதொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கொழும்பிலுள்ள மலே அமைப்புடன் இணைந்தும் பல வேலைத் திட்டங்களையும் செய்தோம்.
கேள்வி: கணவரின் நீண்டகால அரசியல் அனுபவத்தில் இருந்து இக்கால பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? 
சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அரசியல​ால் தான் அதை செய்ய முடியும் என்பதை நான் நம்புவதில்லை. சேவை செய்யும் மனப்பான்மையுள்ளவர்கள் அதை செய்ய தயங்குவதில்லை. ஆனால் கால மாற்றத்தில் இன்று எல்லாமே அரசியல் மயமாகிவிட்டது. பெண்களின் உணர்வுகள், அவர்களின் தேவைகளை பெண்களே நன்கறிவர். ஆதலால் சட்டம் இருக்கும் இடத்தில் எமது கைகளும் உயர்ந்தா​லே எமது உரிமைகளை இலகுவாக அடைய முடியும். அரசியல் எமக்கெதற்கு என்று வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து பாருங்கள், திருப்பம் தானே வரும். சரிநிகர் சமம் என்பது ஓர் சாதாரண விடயம். ஆகையால் பாலின வேறுபாட்டை மறந்து பதவிகளை கைப்பற்றுங்கள். அதன் பிறகு தைரியும் தானே வரும். செயற்படுத்துங்கள் பெண்களுக்கான சுய உரிமையை வெல்வதற்கு!

தினகரன் - 03.12.2017

“பெண்களுக்கான இட ஒதுக்கீடு சகல துறைகளிலும் வேண்டும்!” | சந்திரிகா சுப்பிரமணியம்

செப்டம்பர் 08, 2020 0

சந்திரிகா சுப்பிரமணியம் 
ஊடகத்துறையில் மிக நீண்டகால அனுபவமுள்ள மூத்த 
பத்திரிகையாளர், ஆய்வாளர், தற்போது அவுஸ்திரேலியாவில் 
சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். 
ஊடகத்துறையையும், சட்டத்துறையையும் இணைத்து 
அவர் பல விரிவுரைகளையும், பயிற்சிப் 
பட்டறைகளையும் நடத்திவருகிறார். 
தற்போது இலங்கை வந்திருக்கும் 
அவர் எமக்கு அளித்த விசேட பேட்டி...
இன்றைய ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை எப்படி காண்கிறீர்கள்?
சிலர் பெண்களை மேலே வர விடுவதில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. ஆண் ஊடகவியலாளர்களையும் பெண் ஊடகவியலாளர்களையும் சரிசமமாக நடத்துவதில்லை. சில இடங்களில் சம்பளங்கள் ஒரே மாதிரி வழங்குவதில்லை. இதே பிரச்சினை ஊடகத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆண், பெண் ஊழியர்களுக்குமிடையில் பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்றது. இட ஒதுக்கீடு செய்தது போல் எல்லா துறைகளிலும் இத்தனை வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். ஊடகவியலாளர்கள் என்றால் எல்லா வேலைகளையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அது ஆசிரிய பீட தலைமைத்துவத்தின் கீழ் தான் வர வேண்டும். நிறைய இடங்களில்  ஆசிரிய பீட தலைமைத்துவம் தட்டுப்பாட்டில் இருக்கிறது.

நிர்வாகம்  சிலஆசிரிய பீட கொள்கைகளை வைத்திருக்க வேண்டும். 'பெண்களுக்கு வேலை செய்யக் கூடிய பாதுகாப்பு, இரவு எத்தனை மணி நேரம் என்றாலும் வந்து வேலை செய்யக் கூடிய சூழல் இருக்கின்றதா? நலம் மற்றும் பாதுகாப்பு இருக்கின்றதா? பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமல் இருக்கின்றதா? இவை சார்ந்த கொள்கைகள் வைத்திருக்க வேண்டும். இதைத் தவிர முறையிடல் கொள்கை ஏதாவது வைத்திருக்க வேண்டும். ஏதாவது நடந்தால் எந்த விதிமுறையில் இவர்கள் முறையிடலாம்? அப்படி செய்தால் முறையிடுபவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது. இவையெல்லாம் எழுத்து மூலம் எங்கும் இருப்பதில்லை. இலங்கை முழுவதும் இந் நிலை தான். இவையெல்லாம் தனியாக செய்ய முடியாது. ஒரு நிறுவனம் சார்ந்த முயற்சி யால் தான் செய்ய முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்றால், எல்லா ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து ஒரு பெண்கள் அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் பெண்கள் பணியிடங்களில் தொடர்பான சட்ட திட்டங்கள் , கொள்கைகள் அமைக்கப்பட  வேண்டும். ஆனால் இதற்கு அதிக காலம் செல்லும்.  என்றாலும் முயற்சி செய்யலாம். இத் தலைமுறைக்கு இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்காவது இது கிடைக்க வேண்டும். 
ஊடகங்களில் பெண்களின் பிரச்சினைகளை எப்படி கையாளலாம்?
முதலில் எந்தவொரு நிறுவனத்திலும் தொழிலாளர் கொள்கை ஒன்று இருக்க வேண்டும். இது ஒரு தொழிலாளர் பிரச்சினை. நீங்கள் ஒரு பெண்ணை வேலைக்கு வைத்து விட்டு அவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லையென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு கொள்கை இருக்க வேண்டும். அது எங்கேயும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அதிகமான பெண்கள் படித்து வேலைக்கு செல்கிறார்கள். அதுவும் பெண்கள். அவர்கள் உலகத்தைப் பற்றி நன்றாக புரிந்து கொள்பவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்குரிய துன்புறுத்தல் தொடர்பான முறையீட்டு முறை இல்லாமல் இருக்கின்றது. கட்டாயம் ஒரு  முறையீட்டு முறை ஒன்று வைக்கத்தானே வேண்டும். அடுத்ததாக அப்படியாராவது நடந்து கொண்டால் அவர்களுக்கான என்ன நடவடிக்கை கடுமையாக இருக்கின்றது என்ற பயம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அப்போது தான் வேலை செய்யும் இடங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கும். 
சட்டத்தரணியான நீங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்களுக்காக மேற்கொள்ளப்படும் சட்ட திட்டங்களை எவ்வாறு காண்கிறீர்கள்? 
பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டங்களே சரியில்லை. வெளிநாடுகளில் எல்லாம் ஒரு பாலியல் துன்புறுத்தலை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றால் அது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும். அது உங்களுடைய நடத்தை பதிவில் பதியப்படும். நீங்கள் முக்கியமான பதவிகளுக்கு போகும் போது அந்த பதிவை பார்ப்பார்கள். அதனால் அவ்வாறு செய்ய பயப்படுவார்கள். இங்கு அவ்வாறான ஒரு முறை இல்லை. பெண்கள் தொடர்பான சட்டங்கள் பாதுகாப்பானவையாகவும், மிகவும் பலப்படுத்தப்பட்டவையாகவும் இருக்க வேண்டும்.  
பெண்கள் ஊடகத்துறையில் முன்னோக்கி சொல்வதற்கு?
முதலில் உங்கள் மொழியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகத்துறையை பற்றிய போதிய அறிவு இருக்க வேண்டும். அதேநேரம் எதிர்த்து நிற்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவு மிகவும் முக்கியம். அதை வாசிப்பதனால் தான் பெற்றுக் கொள்ள முடியும். 
ஊடகத்துறையில் உங்களை பாதித்த அனுபவங்கள் பற்றி?
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் அதை விட்டு விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றால் அங்கும் இதே துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இது என்னை மிகவும் பாதித்த விடயம். திறமைகள் இருந்தும் அவர்களை அப்படியே அடக்கி வைத்து விட்டு எந்தவிதமான வேலையையும் கொடுக்காமல் அடக்கி ஆளப்படுகிறார்கள்.
பெண்களின் அரசியல் பிரவேசத்தில் குடும்பச் செல்வாக்கின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஒரு விதவை பெண். ஆனால், அனுதாப அலையினூடாக அரசியலுக்குள் நுழைந்த முதன்மை பெண் அவர். கிறிஸ்ணசாமி என்ற ஒரு ஊடகவியலாளர் தான் 'த வீபிங் விடோ' என்ற தலைப்புடன் முதன் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் உரையை எழுதினார். அப்போது ஆரம்பித்த அனுதாப அலையை வைத்துக் கொண்டு தொடர்ந்து செல்லாம் என்பது ஒரு சாராருடைய கருத்து. அதேநேரம் இப்போது நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் அரசியலுக்கு முன்வருவதில்லை. நாளைக்கு தேர்தல் என்றால் இன்றைக்கு ஒரு புதுமுகத்தை காட்டினால் எப்படி? அரசியலுக்கு வருவதென்றால் இரண்டு மூன்று வருடமாவது சமூக சேவை செய்திருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் முகம் அனைவர் மத்தியிலும் பதிவாகும். பிறகு நீங்கள் களத்தில் இறங்கும் போது இவர் எங்கள் பிரதேசத்துக்கு இத்தனை சேவைகள் செய்திருக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை விட்டு விட்டு திடீரென்று முகத்தை காட்டி நானும் ஒரு பெண் பிரதிநிதி என்றால் எப்படி? அடிப்படையிலேயே நீங்கள் சில நல்ல காரியங்களை செய்து விட்டு அரசியலுக்கு வரும் போது அது சாத்தியமாகும். 

போராட்டக் களத்தில் தங்களை அர்ப்பணித்த பெண் போராளிகள் ஒரு நோக்கத்தோடு போராடினார்கள். அவர்களுக்கு இந்த அரசியலில் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆகக் குறைந்தது இந்த தமிழ் கட்சிகளாவது அவர்களை அரசியல் பற்றி மறு கல்வியூட்டி பொது வாழ்வில் இணைத்திருக்கலாம். 
உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டின்   சாத்தியப்பாடு குறித்து?
முதலில் அரசரிவியல் பற்றியே தெரியாது. நீங்கள் அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியல் கல்வி என்று எதை கொடுக்கப் போகின்றீர்கள்? பழையதை பார்த்து நாங்கள் அதை பின்பற்றி செய்வோம் என்பதை விட ஒரு சரியான புரிந்துணர்வுடனான அரசியல் கல்வி ஒன்று கட்டாயம் தேவையில்லையா? அரசியல் கல்வி இருக்க வேண்டும். சமுதாயத்துடன் சேர்ந்து நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் இருக்க வேண்டும். அரசியல் எப்படி நடத்துவது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் நீங்கள் பெண்களுக்கு கொடுக்க கூடிய ஒரு வாய்ப்புக்கான சூழலை உருவாக்கி விட்டு பிறகு அவர்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும். அடிப்படை அரசியல் பெண்களுக்கு ஊட்டப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக நீங்கள் மலையகத்தில் இருந்து பெண்களை கொண்டு வருவீர்கள் என்றால் சில நாட்களுக்கு முன்பே இவற்றை தொடங்கியிருக்க வேண்டும். திடீரென்று 25 வீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டார்கள் என்று 50 பேரை கொண்டு வந்து விட முடியாது. ஆகக் குறைந்தது அவர்களை அரசியலுக்கு கொண்டு வரும் போதாவது அவர்களை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டும். நிறைய பணிகள் செய்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும். இனியாவது செய்ய வேண்டும். முகம் தெரியாத ஒருவருக்கு வாக்களிக்க சொன்னால் எப்படி செய்வார்கள்? அடிப்படை சிலவற்றை நீங்கள் செய்திருக்க வேண்டும். அவற்றை செய்ய தவறிவிட்டு திடீரென்று வந்து செய்வது கஷ்டமான விடயம் தான். 
வேட்பாளராக களமிறங்கும் பெண்கள் பலவிதமான இம்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
சமுதாயத்தில் உள்ள சில சீர்கேடுகளை நாங்கள் திருத்தவே முடியாது. அதே நேரத்தில் நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கின்றது. நீங்கள் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே அதற்கான முன்னேற்பாடுகளோடு தான் செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும், வாய்ப்புக்கு தேவையான தகுதிகள்,முயற்சிகள் எடுத்தலும், வளம், திறமை, ஆளுமை ஆகியவற்றை வளர்ப்படுத்தினால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும்.

தினகரன் - 31.12.2017

ஆணாதிக்கத்தோடு மோதுவது முட்டாள்தனம் - புர்கான் பீ இப்திகார்

செப்டம்பர் 08, 2020 0

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஐந்து தசாப்தங்களுக்கு மேல் தன் ஆக்கங்களாலும் குரல்வளத்தாலும் வானொலி நேயர்களின் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தவர். காத்திரமான படைப்புக்களாலும் இனிய குரல் வளத்தாலும் இலங்கையில் மாத்திரமல்ல கடல் கடந்த நாடுகளிலும் ஆயிரமாயிரம் நேயர்களின் அபிமானத்தைப் பெற்றவர். நல்ல கருத்துகள் காற்றோடு போய்விடக் கூடாது என்று செயலுருவைப் பெற களம் இறங்கிய துணிச்சல் மிகு பெண். மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம் நிகழ்ச்சிகளினூடாக வானலைகள் வழியே விழிப்புணர்வைத் தந்த அந்தக் குரலின் சொந்தக்காரி திருமதி புர்கான் பீ இப்திகாருடன்  ஓர் சந்திப்பு...
ஒர் இஸ்லாமிய பெண் என்ற ரீதியில் இலத்திரனியல் ஊடகப் பிரவேசம் எப்படி சாத்தியப்பட்டது?
எனக்கு 5 வயதாயிருக்கும் போதே வானொலியுடனான தொடர்பு உண்டானது. சிங்களம் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகள் இரண்டிலுமே நான் சிறு வயது முதல் பங்குபற்றி  வந்துள்ளேன். பிறகு எழுத்துத் துறையில் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு எழுதவும் தொடங்கினேன். இரண்டு மொழிகளிலும் மேடையில் பேசி அக்காலத்திலேயே தங்கப் பதக்கமும்  வென்றுள்ளேன். சுமார் 25 வருட காலம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். இதனூடாகவே 1959 இல் முதல் முதலாக இலங்கை வானொலிக்கு குரல் கொடுக்க தொடங்கினேன். அன்று தொடக்கம் இன்று வரை வானொலியோடு எனக்கு தொடர்பு இருக்கின்றது. முஸ்லிம் நிகழ்ச்சியூடாக பெண்களுக்கான மாதர் மஜ்லிஸ் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக செய்து வந்தேன். அதனால் இலங்கையில் மட்டுமல்ல தென்னிந்திய நேயர்கள், சிங்கப்பூர், மலேசியாவிலும் இந்நிகழ்ச்சியை கேட்டவர்களும்  இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 35, வருடங்களாக முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். 
முஸ்லிம் பெண்ணாக இருந்தும்  சற்று முன்னோக்கி நீங்கள் சென்ற பாதை...?
எனது சிறு பராயத்தில் பெண் பிள்ளைகள் எல்லோரும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அந்நாளில் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று சர்வதேச மட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. முஸ்லிம் நாடுகளும் அதில் பங்குபற்றுகின்றன.

என்னுடைய பங்குபற்றுதல் ஆசை சிறுவயதிலிருந்தே இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் விளையாட்டுப் போட்டி அறிவிப்பாளராக இருந்தேன். 5ம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் போதே பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று எனது வாப்பாவுக்கு வேண்டியவர்கள் சொல்லி விட்டார்கள். வாப்பாவுமும் உம்மாவிடம் பாடசாலைக்கு அனுப்ப கூடாது என்று சொல்லிவிட்டார். உம்மாவுக்கு என்னை படிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம். பிறகு எனது பாடசாலை ஆசிரியர்கள் உம்மாவிடமும் வாப்பாவிடமும் கலந்துரையாடி என்னை பாடசாலைக்கு அனுப்ப சொன்னார்கள். நான் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் போது உம்மா என்னை சோர்டன் டைப்பிங் கிளாஸூக்கு அனுப்பி வைத்தார். அப்போது வீட்டுக்கு மொட்டைக் கடதாசி  ஒன்று வந்தது. பெண் பிள்ளையை டைப்பிங் கிளாஸூக்கு அனுப்புவது  சரியா? என்று.

இப்படி எல்லாவற்றுக்கும் தொடர்ந்து தடைகள் வந்தன. அப்போதெல்லாம் இதற்கான தீர்வு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். சிறுவயது முதலே இப்படி எதை எடுத்தாலும் செய்யக் கூடாது, என்று கேட்டு கேட்டு வளர்ந்தது தான் அதிகம். ஆனால் வேண்டாம் என்று சொன்னதை தான் நான் செய்திருக்கின்றேன். இந்த சவால்களை தாண்டியே நான் இந்நிலைக்கு வந்திருக்கிறேன்.
50 வருடங்களுக்கு மேல் ஒரு பெண்ணாக இத்துறையில் எவ்வாறு சாதிக்க முடிந்தது?​
அதற்கு காரணம் எனக்குள் இருந்த தைரியம் தான். தப்பான விடயம் எதுவானாலும்  நேரே நாசுக்காக சொல்லிவிடுவேன். ஆதலால் நான் நிலைத்திருந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதே நேரம் என்னுடைய திறமைகளை நானே வளர்த்துக் கொண்டேன். நாம் ஒரு இடத்தில் இருப்பதற்கு எங்களுடைய திறமை, தகுதியை  வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நிலையில் நாங்கள் இருந்தால் எங்களை மடக்கி விடுவார்கள்.

போட்டிப் பொறாமைகள் இல்லாத இடங்கள் எங்கு தான் இருக்கின்றது. ஆனாலும் நான் எதையும் பொருட்படுத்துவதில்லை. நான் மிகவும் நொருங்கிப் போகும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்தன. இனி இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்று  மனம் உடைந்து போன சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன. இருந்தாலும் கூட எனது நிகழ்ச்சிக்காக இத்தனை நேயர்கள் இருக்கின்றார்களே என்று நினைக்கும் போது நான் இவற்றை மறந்து விடுவேன். நேயர்களுக்கு நல்ல நிகழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதே எனது தலையில் இருந்த முதல் விடயம். அதை நான் கடைசி வரையிலும் செய்து கெண்டே தான் இருந்தேன். 
ஆண்களின் எழுத்தாற்றலை விட பெண்களின் எழுத்தாற்றல் குறைவானது என்று கூறப்படுகிறது அது பற்றி உங்களது கருத்து? 
அன்று தொடக்கம் ஆண்கள் நிறைய எழுதி வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் வெளி உலகத்திற்கு செல்கிறார்கள், வாசிக்கின்றார்கள், பலருடன் கலந்துரையாடுகின்றார்கள், பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆகவே எழுத்துத் துறையிலே பெண்கள் குறைவு தான் ஆனால் பெண்கள் இப்போது வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்து அவர்களது  திறமைகளை வெளிப்படுத்த நாம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அவர்களை இன்னும் வளப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை நடத்தலாம். அப்போது அவர்கள் இன்னும் வளமாக சிந்திக்கத் தொடங்குவார்கள். அவர்களது எழுத்துக்களிலே செழுமை, ஆளுமை அதிகரிக்கும். இவ்வாறு அவர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உணர்வு பூர்வமாக சிந்தித்து தங்களது பிரச்சினைகளை வெளிக் கொணர்வார்கள். ஓர் ஆண் பிரச்சினையை முகம் கொடுப்பதை விட பெண் பெண் சம்பந்தமான பிரச்சினைகளை முகம் கொடுத்து எழுதும் போது அதில் ஒரு தெளிவு பிறக்கும். அதற்கான வாய்ப்புக்கள் வர வேண்டும். வருங்காலத்தில் அதிகமான பெண்கள் வந்து விடுவார்கள். 
ஆணாதிக்கத்தைப் பற்றி உங்கள் பார்வையில்...?
ஆண் தலைமைத்துவம் என்பது ஆரம்ப கால வரலாற்றிலிருந்தே இருக்கின்றது. ஆணாதிக்க சொற் பிரயோகங்கள் எல்லா இடங்களிலும் உண்டு. பலர் தங்கள் ஆதிக்கத்துக்குள் தான் பெண்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் குடும்பத்தை அவர்கள் அடக்கி ஆள நினைக்கிறார்கள்.

அடக்கி ஆள நினைப்பது தான் பிழை. அடக்கி ஆள முயற்சிக்கும் போது தான் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள். அவர்களுடைய ஆதிக்கத்தை செலுத்த முற்படும் போது அந்த பெண் தனக்குள் வெம்பிப் போகிறாள். அடக்குமுறை இல்லாவிட்டால் அந்த குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. அடக்குமுறையால் வீட்டில் உள்ள அன்பு இல்லாமல் போகின்றது. சில குடும்பப் பெண்கள் பயப்படுவது போல் நடிக்கிறார்கள். அடக்குமுறையை பிரயோகித்து பிரயோகித்து மற்றவர்களின் அன்பை இழந்து வீழ்ந்த தலைமைத்துவத்தை கூட சில குடும்பங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே அடக்குமுறையை பிரயோகிக்காமல் அன்பை பிரயோகியுங்கள். எதிலுமே அடக்குமுறையென்றால் அதையும் மீறி ஒருவர் எழும்பத் தான் செய்வார். அவர்கள் எழும்பும் போது நீங்கள் நொருங்கிப் போய் விடுவீர்கள். அதற்குத் தான் அவர்களை எழும்ப விடாமல் அவ்வாறு அடக்குகிறார்கள். எங்கே எழும்பிடுவார், நம்மை கேள்வி கேட்டுவிடுவாள் என்று தான் அடக்குகிறார்கள். கடைசியில் அவர்கள் தான் தோற்று விடுவார்கள். அது குடும்பமாக இருந்தாலும் சரி சமூக ரீதியாக இருந்தாலும் சரி. 

நான் கடந்து வந்த பாதையில் ஆணாதிக்கத்தை தந்திரமாக உபயோகித்து கவிழ்த்து விடும் பணியை செய்தோர் இல்லலாமல் இல்லை. 
இன்றைய பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள்...  அதற்கான தீர்வு என்ன?
இன்றைக்கும் சவால்கள் பல்வேறு ரீதியில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தொழில் ரீதியாக, குடும்ப ரீதியாக.  குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால் இன்றைக்கும் கையை நீட்டி அடிக்கும் கணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  உத்தியோகம் பார்க்கும் பெண் கூட அடியை வாங்கிக் கொண்டு மௌனமாகத்தான் இருக்கின்றார்.  அப்போது அவர் உள ரீதியாக  பாதிக்கப்படுகிறாள். தற்போது அநேகமான பெண்கள் தொழிலுக்கு செல்கின்றார்கள். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால்  அவர்கள் வீட்டு வேலை, அலுவலக  வேலை... போன்ற அத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டு  ஆணுக்கும் பக்க பலமாக இருக்கின்றாள். இச் சுமைகளையும் சுமப்பது மட்டுமல்லாமல் அவள் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றாள். ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. எந்தப் பெண்ணும் பெண்ணியம் பேசிக் கொண்டு போவதில்லை. பெண்ணியம் என்றால் அவர்கள் வீட்டிற்கு அடங்காதவர்கள், இவர்களின் உடைகளில் வித்தியாசம் இருக்கும், அவர்கள் ஆண்களின் பேச்சை கேட்பதில்லை இவ்வாறான தவறான வரைவிலக்கணம் அப்போதே கொடுக்கப்பட்டு விட்டது. பெண்ணியம் என்றாலே தவறாக நினைக்கின்றார்கள்.

ஒரு பெண் சமுதாயத்தில் பலத் திறமைகளுடன் உயர்  நிலையில் இருந்தால், அவளை அப்படியே ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவளை பற்றி ஒரு தப்பான கருத்தைச் சொல்லிவிடுகிறார்கள். அது அன்று தொடக்கம் இன்று வரை இருக்கின்றது. அந்த வசனத்தை பிரயோகித்து அவளை நிலைகுலையச் செய்து அவளை ஒரு குழப்பமான நிலைக்குத் தள்ளி அவளுடைய பலத்தை அப்படியே பலவீனமடையச் செய்து நொருக்கி ஸ்தம்பிதமடையச் செய்து விடுவார்கள். அது தான் அவர்களிடமுள்ள ஒரே ஆயுதம். நீ என்னவேண்டுமென்றாலும் சொல் என்று பெண் முன்வந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும், பெண்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன கொடுப்பது. அதை நாங்களே பெற்றுக் கொள்வோம். அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம். முதலில் நாம் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். அதற்கு கல்வியறிவு தேவை. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் பெண்கள் எழுந்து நின்று விடுவார்கள் என்று தான் ஆரம்பத்திலேயே பெண்கள் படிக்கக் கூடாது. படிக்க விட்டால் இவள் இதையெல்லாம் கேட்பாள் ஆகவே அவளுக்கு படிப்புத் தேவையில்லை என்று அதற்கு தடை விதித்தார்கள். இதை இப்போது பெண்கள் புரிந்து கொண்டு முன்னேறி வந்து விட்டார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு சவால் தான். இந்த சவால்களுக்காக ஆணாதிக்கவாதிகளுடன் மோதுவது முட்டாள் தனம்.

அதற்கு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்களாகவும் பெண்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினகரன் - 16.07.2017

வடக்கில் 58.121 பெண்களின் தலைமையில் குடும்பங்கள் - சுகந்தி

செப்டம்பர் 08, 2020 0

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 58.121 பெண்கள் தமது வீடுகளில் தலைமைப் பாத்திரம் வகித்து குடும்பங்களை கவனித்து வருவதாக “வீட்டு வரவு செலவு பற்றிய ஆய்வறிக்கை” தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2012-2013 க்கான அறிக்கை அதற்கடுத்ததடுத்த ஆண்டுகளிலேயே வெளியிடப்பட்டன. அப்படி வெளியான அறிக்கையிலேயே இந்த விபரங்கள் பல வெளியாகியுள்ளன. ஆனாலும் உத்தியோகபூர்வ தவல்களை விட மோசமாகவே இந்த நிலை இருக்கக் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில்  கணவரை இழந்தவர்களின் தொகை 90,000 என்று கருதப்படுகிறது. அதைவிட காணாமல் போனவர்கள், ஊடமுற்றவர்கள், நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் என வீட்டின் பிரதான பாத்திரம் வகித்து வந்த ஆண்களின் துணை அல்லாத குடும்பங்களும் ஏராளம்.

யுத்தத்தில் கணவரை இழந்தவர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக மட்டக்களப்பே இருந்து வருகிறது.

கணவரை இழந்தவர்கள்:
இலங்கையில் பெண்களின் பொறுப்பில்/தலைமையில் இருக்கும் வீடுகளில் 50% வீதமானோர் கவரை இழந்தவர்கள் ஆவர். இயற்கை மரணம், தற்கொலை, யுத்தத்தில் கொல்லப்பட்ட போன்ற காரணங்களால் ஆண்கள் அற்றுப்போன வீடுகளை அப்படிக் குறிப்பிடலாம்.

திருமணமானோர்
பெண் தலைமையில் உள்ள 30% பெண்கள் திருமணமானோராவர். ஆண்கள் உழைப்புக்காக நாடு கடந்து சென்றவர்கள், காணாமல் போன ஆண்கள், நோயுற்ற ஆண்கள், பொறுப்பற்ற ஆண்கள் ஆகியோரின் துணைவிகளால் இந்த 30 வீத தலைமை கொடுக்கப்படுகின்றது.

பிரிந்துவாழ்பவர்கள் / விவாகரத்து ஆனவர்கள்
இவர்கள் குடும்ப பெண் தலைமையில் 15% வீதத்தினராக உள்ளனர்.

திருமானவர்கள் / தனித்து வாழ்பவர்கள்
இவர்கள் குடும்ப பெண் தலைமையில் 4% வீதத்தினராக காணப்படுகின்றனர்.

இதில் கவலைகொள்ள வேண்டிய இன்னொரு பக்கம் என்னவென்றால் இவர்களில் 35% வீதத்தினர் மாத்திரமே ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்கிற அதிர்ச்சித் தகவல்.

மலையகப் பகுதிகளில் பெண் தலைமையில் உள்ள குடும்பங்களில் 52% வீதத்தினர் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருந்தபோதும் அவர்களின் வருமான நிலை ஆகக் கீழ் மட்டத்தில் இருப்பதையும் இந்த புள்ளிவிபரங்களில் இருந்து அறிய முடிகிறது.

இதைவிட பெண் தலைமை வகிக்கும் 22% வீதமானோர் தொழில் புரியும் வயதையும் தாண்டிய முதியோர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு சீர் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கவிருப்பதாக அறியக் கிடைக்கிற போதும் இது எந்தளவு உரியவர்களுக்கு போய் சேரப் போகிறது என்பது குறித்த விசனங்கள் ஏற்கெனவே எழ ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னரான நிவாரணங்கள் இறுதியில் சென்றடைவதில் காணப்பட்ட அசமத்துவமும், பாரபட்சங்களும், கவனயீனங்களும் இந்த விடயத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே சம்பந்தப்பட்டவர்களின் அவா.

நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பால் இந்த நிலைமை இனித் தோன்றாது பார்த்துக்கொள்வதற்கான கொள்கைவகுப்பும், நடைமுறை செயற்திட்டங்களுமே அதிகம் அவசியப்படுகின்றன.

நன்றி - தினகரன்

உலகை உலுக்கும் நோமோஃபோபியா - சுகந்தி மணிமாறன்

செப்டம்பர் 08, 2020 0
2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை

அதென்ன நோமோஃபோபியா என்கிறீர்களா? இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதலைத் தான் குறிப்பிடுகிறது. போதைப்பொருளை உட்கொண்டவர்கள் அது அல்லாமல் கை நடுங்குவது, இல்லாமல் ஆதீத அச்சத்துக்கு உள்ளாவது போன்று தான் இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் தம் வசம் இல்லாமல் போகும் போது அடைகிற பதட்ட நிலையையும், நடுக்க நிலையையும் தான் நோமோஃபோபியா என்கிற ஒரு வகை நோயாக அதனை அழைக்கின்றனர். உலகத்தின் மிகப் பெரும் “ஃபோபியா” என்பது நோமொஃபோபியாதான் என்கிற தகவல் பொய்யில்லை.

போன் அருகில் இல்லையே, இன்னும் சார்ஜ் ஆகவில்லையே, பயன்படுத்த முடியாத இடத்தில் இருக்கின்றேனே, சிக்னல் கிடைக்கவில்லையே, இனைய இணைப்பு கிடைக்கவில்லையே, மறுமுனையில் பதில் கிடைக்கவில்லையே, முகநூல், டுவீட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் தான் இட்ட நிலைத்தகவலுக்கு லைக்குகள், பின்னூட்டங்கள் கிடைத்து விட்டனவா என்பது போன்றவற்றை சிந்தித்தபடியே அதிக நேரத்தையும் செலவிட்டு, மன உளைச்சலுடன் உலவும் ஒரு சமூகம் உருவாகியிருக்கிறது. இந்த புதிய உலக ஒழுங்கு அடிப்படை இலக்கை விட்டு விலகி ஏதோ போக்கில் வழிநடத்திச் செல்லும் அபாயமான மன நோயை உருவாக்கியிருப்பதை நாம் கவனித்தாக வேண்டும்.

ஓய்வில்லாமல் தொலைபேசியை பயன்படுத்துவது, அடிக்கடி சோதிப்பது, இரவிலும் அடிக்கடி எடுத்துப் பார்ப்பது, நடக்கும் போதும் எடுத்து கவனிப்பது எல்லாமே இந்த நோயில் அறிகுறிகள் தான்.

“No-mobile-phone phobia” என்பதன் சுருக்கமே Nomophobia என்று இந்த புதிய வகை பிரச்சினையை அழைக்கின்றனர். உணவு உண்ணும் போது, உரையாடலில் இருக்கிற போது, நித்திரைகொள்ளும் போது ஏன் மலசல கூடத்திற்கும் கூட கூடவே கொண்டு சென்று பயன்படுத்தும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சினைக்கு இன்று அதிகம் ஆளாகியிருப்பவர்கள் 18-24 க்கும் இடைப்பட்ட வயதினர் தான் என்கின்றன கருத்துக் கணிப்புகள். அதுவும் அந்த தொகையில் அதிகமானோர் ஆண்களை விட பெண்கள் தான் என்கிறது அந்த ஆய்வு. பயன்படுத்துபவர்களில் 66 வீதமானோர் இதற்கு பலியாகியிருப்பவர்களே. 
ஒரு புறம் இவ்வாறு உளப்பிரச்சினையை இது கொடுத்து வருகிற போது மறுபுறம் உடல் ரீதியிலான பல வகையான நீண்டகால பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது என்று பல ஆய்வுகள் தினசரி வெளிவந்தவண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் இத்தகைய மீள முடியாத ஆட்கொல்லியான இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பது என்பது இன்று உலகப் பிரச்சினையாக ஆகியிருப்பது தான் நாம் கவனிக்க வேண்டிய புள்ளி.

மனிதத் தொடர்பில் இருந்து அந்நியமாகி “சமூக ஊடகம்” என்கிற பெயரில் சமூத்துடன் நேரடி தொடர்பில்லாத இயந்திரத்தனமாக வழிநடத்துகிறது இந்த நோமோஃபோபியா. சிரிப்பு, புன்னகை, கவலை, அழுகை, அன்பு, ஆத்திரம் போன்ற உணர்வுகளைக் கூட கார்ட்டூன் ஸ்மைலிகளாக வெளிபடுத்தி உண்மையான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்திலிருந்து அந்நியமாகின்ற போக்கு வளர்ந்து விட்டுள்ளது. இதற்கு அடிமையாகிறவர்கள் தனிமைக்கு பழக்கப்படுகின்றனர். காலப்போக்கில் சமூகம், குடும்பம், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று கலப்பதை கூட எரிச்சலூட்டுகிற ஒன்றாக ஆக்கிக் கொள்கின்றனர். புன்னகையை விட்டு விலகி தீவிரமாக முகத்தை வைத்திருக்கும் பலரையும் தினசரி நாம் காண்கிறோம்.

இத்தனை காலம் அருகில் இருக்கும் மனிதர்களையும், சூழலையும் கவனிப்பது, ஆராய்வது, மதிப்பிடுவது, அவற்றோடு ஊடாடுவது போன்ற பழக்கங்கள் அற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றன. காத்திருக்கும் சகல இடங்களிலும் குடிந்த கழுத்துடன், இரு கைகளாலும் போனை முகத்துக்கு அருகில் வைத்து ஊன்றிகவனித்துக் கொண்டிருக்கும் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை எங்கெங்கும் அதிகரித்திருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஆய்வை நடத்தினார்கள் அந்த ஆய்வின் போது பெரியவர்களை விட சிறுவர்களுக்கே பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய சாத்திங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். குறிப்பாக தம்மோடு கையில் வைத்தோ, மடியில் வைத்தோ நீண்ட நேரம் இத்தகைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் சிறுவர்களை கதிர்வீச்சுக்கள் பெரியவர்களை விட அதிகமாக பாதிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதன் பக்க விளைவுகள் உடனடி விளைவாக இருக்காவிட்டாலும் நீண்டகால போக்கில் ஒரு உடல்நலம் குன்றிய ஒரு பரம்பரை இதனால் உருவாவதாக இன்றைய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கண் பிரச்சினை, கழுத்து வலி, கூன் விழுதல் போன்றனவும் மேலதிக உடல் ரீதியான சிக்கல்கள் உருவாக்கி வருகின்றன.

நல்ல சந்ததியை உருவாக்க விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார் போன்றோர் இவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் கையாளுமாரும் கோருகின்றன சில அமைப்புகள்.
பெண்களே அதிகம் இதற்கு இலக்காகி இருக்கிறார்கள் என்கிற தகவலை நாம் புறக்கணித்து விட்டு கடக்க முடியாது. இதற்கு வழிதேடும் காலம் வந்துவிட்டது.
தினகரன் - தினகரன் - 05.03.2017

“மாற்றத்துக்காக பலமுறுவோம்!” அரசியல் அதிகாரத்தை அடைவோம்! - சுகந்தி மணிமாறன்

செப்டம்பர் 08, 2020 0

எனது நேரம், எனது உழைப்பு, எனது பெறுமதி 

குடும்பப் பெண்களிடம் வழமையாக நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு “வீட்டில் சும்மா தான் இருக்கிறேன்” என்று கொடுக்கப்படும் பதிலைக் கண்டிருப்போம்.
இது ஒரு பழக்கப்பட்ட கேளிவியாகவும் பழக்கப்பட்ட பதிலாகவும் இயல்பாக நிலவுவதைக் காணலாம். ஆனால் பெண்கள் ஒன்றும் வீடுகளில் சும்மா இருப்பதில்லை, இன்னும் கூறப்போனால் ஆண்களையும் விட அதிக நேரம் உழைப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்று எப்போதோ உலக அளவில் நிரூபித்தாகி விட்டது.
மேலும் பெண்கள் இன்று வெளியில் சென்று பணிபுரியும் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். ஆக அவர்களின் வேலைகள் இரட்டிப்பாக ஆகியிருப்பதே நிதர்சனம். இதைத் தான் இரட்டைச் சுமை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் வெளியில் தொழில் புரிந்து வந்ததன் பின்னர் வீட்டில் அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்புகள் எந்த விதத்திலும் மாறியது கிடையாது. வேலைக் களைப்புடனும், உளைச்சலுடனும் இந்த கடமைகளை கவனித்துத் தான் ஆக வேண்டும் என்பது ஆணாதிக்க சமூக விதி.
வேலையிலிருந்து வீடு திரும்பும் பெண்கள் குழந்தை பராமரிப்பு, உணவு தயாரிப்பு, வீடு துப்பரவு செய்வது, துணி துவைப்பது, கணவனின் தேவையைக் கவனிப்பது என பம்பரமாக சுழன்று கொண்டிருப்பது எங்கெங்கும் காணமுடிகிற அவலம். இந்த உடல் உளச் சிக்கலை அடக்கிக்கொண்டு இயந்திரத்தனமாக வீட்டின் அமைதி சீர்குலையாமல் பேனா வேண்டிய மகா பொறுப்பும் பெண்ணையே சேர்ந்துவிடுகிறது.
எனவே உடற்களைப்பு, உளக் களைப்பு, குறை நித்திரை, நிறை வேளை என தொடரும் பெண்களின் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்படுவது கிடையாது. “அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும்” என்பது பிரசவத்துக்கு சரியாக இருக்கலாம். ஆனால் ஏனைய அனைத்து சுமைகளையும் அவள் மட்டும் சுமக்க வேண்டும் என்கிற நிலை மாற்றப்படக்கூடியது. வேலைப் பகிர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில் சரி செய்யக்கூடியதே. இன்றைய புதிய உலகில் இதில் ஆணாதிக்க நிர்ப்பந்தங்களுக்கு விடை கொடுக்கலாமே.
பெண்களின் வீட்டு வேலையை அளவிடும் பழக்கம் ஆணாதிக்க சமூக அமைப்பில் கிடையாது. அப்படி ஒரு அளவீடு இருந்துவிட்டால் ஆணைகளை விட பெண்கள் எத்தகைய பலசாலிகள் என்பது மட்டுமல்ல எந்தளவு திறமையானவர்கள் என்பதும் அறியக் கிடைக்கும்.
இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். பெண்களில் 60 சத வீதமானோர் தொழிற்படை என்கின்றன தரவுகள். கல்வித் தரத்திலும், அளவிலும் பெண்களின் வளர்ச்சி அதீதமாக வளர்ந்திருப்பதையும் அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் சகல தளங்களிலும் அதிகாரத்தில் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே உள்ளனர்.
பெண்கள் செலவிடும் நேரம், அவர்கள் செலுத்தும் உழைப்பு, விரயமாக்கும் சக்தி என்பவற்றின் பெறுமதியை உணரும் சமூகமாக நமது சமூகம் இல்லை.
எனவே தான் இன்னமும் நமது பெண்கள் “சும்மா வீட்டில் இருக்கும் பெண்களாக” கணிக்கப்படுகிறார்கள். தாமும் உழைக்கும் பெண்களே என்று தார்மீகத்துடன் நெஞ்சு நிமிர்ந்து கூற அவர்களுக்கு வழி சமைக்கப்படவில்லை.
பெண்களையும் தனக்கு சமமான மனித ஜீவியாகவும், தனக்கு நிகரான அத்தனை உணர்வுகளும் உள்ள சக தோழியாகவும் நடத்தும் உலகமே அற்புதமான உலக்கெனலாம்.
2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை


சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் மார்ச் 8 திகதியாகும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் ஒரு சுலோகம் அறிவிக்கப்படுவதுண்டு. இம்முறை “மாற்றத்துக்காக பலமுறுவோம்!” என்கிற சுலோகத்தை 2017க்காக அறிவித்திருக்கிறார்கள்.

நம் நாட்டைப் பொறுத்தளவில் மகளிர் அமைப்புகள் வருடாந்தம் உடனடிக் கோரிக்கைகளையும், நீண்டகால கோரிக்கைகளையும் முன்வைத்து தமது முன்மொழிவுகளை வலியுறுத்துவார்கள். அந்த வகையில் பெண்களின் அரசியல் பிரதிநித்தித்துவம் பற்றிய கோரிக்கைகளை இம்முறையும் பல அமைப்புகள் முன்வைத்துள்ளன. அப்படி அரசியல் பிரதிநித்துவக் கோரிக்கையை முன்னெடுப்பதில் முன்னணி அமைப்பாக செயல்படுவது “பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு” ஆகும்.

இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்து ஒரே தடவையில் 1931 இல் சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதலாவதாக சர்வஜன வாக்குரிமையை பெற்ற நாடு இலங்கை. முதலாவது ஆசிய நாடும் இலங்கை தான். வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 ஐ இது வரைத் தாண்டியதில்லை.

உலகுக்கே முதலாவதாக பெண்ணொருவரை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தைத் தந்ததும் இலங்கை தான். இத்தனை இருந்தும் இன்றுவரை இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவதில் பெண்கள் 6 வீதத்தைத் தாண்டிச் சென்றதில்லை. இதற்கான போராட்டம் பல வருடகாலமாக நீடித்த போதும் இந்த நிலைமையில் மாற்றம் கண்டதில்லை. நியாயமாகப் பார்த்தால் பெண்கள் சனத்தொகையில் தமக்கு நிகரான விகிதாசார அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை கோரியிருக்க முடியும். ஆனால் வெறும் 33 சத வீதத்தையே கோரி வந்திருக்கிறார்கள். இன்று அதையும் குறைத்து 30% வீத ஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்டை நாடுகளான இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஒப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்படுகின்றன. ஆனால் அங்கு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கு மேல் பெண்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அது தவிர கல்வி கற்றோர் தொகையும் கூட ஆண்களை விட பெண்களின் தொகை உயர்ந்து கொண்டு செல்கிறது. இலங்கை கல்வியறிவில் 93 வீதமாக காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான ஒதுக்கீடு இன்று வரையுமே எட்டாக்கனியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கைக்கு அதிகளவில் அந்நியசெலாவணியை ஈட்டித்தருபவர்கள் பெண்கள். இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டங்களில் உழைக்கும் பெண்களும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக இருப்பவர்களுமே அதிகமான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தருகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? பல்வேறு வன்முறைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணிபுரியும் இப்பெண்களின் பாதுகாப்புக் குறித்துச் சிந்திப்பதுதான் பல்வேறு பிரச்சினைகள். இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியினாலும் பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனப்பாங்கும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கான பெண்களுக்கான தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக இருந்து வருகின்றன.


பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்களாகிவிட்டுள்ளன. தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 86 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப் பட்டியல் முறையை பயன்படுத்தும்படி கெஃபே போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

இம்முறை சர்வதேச பெண்கள் தினத்தை “மாற்றத்துக்காக பலமுறுவோம்!” என்பதை இலங்கையின் அர்த்தத்தில் அரசியல் அதிகாரத்துக்காக பலமுறுவதையே முன்னிறுத்த வேண்டியுள்ளது.

வீட்டில் “சும்மா” இருக்கும் பெண்கள் பற்றி... - சுகந்தி மணிமாறன்

செப்டம்பர் 08, 2020 0
எனது நேரம், எனது உழைப்பு, எனது பெறுமதி 

குடும்பப் பெண்களிடம் வழமையாக நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு “வீட்டில் சும்மா தான் இருக்கிறேன்” என்று கொடுக்கப்படும் பதிலைக் கண்டிருப்போம்.

இது ஒரு பழக்கப்பட்ட கேளிவியாகவும் பழக்கப்பட்ட பதிலாகவும் இயல்பாக நிலவுவதைக் காணலாம். ஆனால் பெண்கள் ஒன்றும் வீடுகளில் சும்மா இருப்பதில்லை, இன்னும் கூறப்போனால் ஆண்களையும் விட அதிக நேரம் உழைப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்று எப்போதோ உலக அளவில் நிரூபித்தாகி விட்டது.

மேலும் பெண்கள் இன்று வெளியில் சென்று பணிபுரியும் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். ஆக அவர்களின் வேலைகள் இரட்டிப்பாக ஆகியிருப்பதே நிதர்சனம். இதைத் தான் இரட்டைச் சுமை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் வெளியில் தொழில் புரிந்து வந்ததன் பின்னர் வீட்டில் அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்புகள் எந்த விதத்திலும் மாறியது கிடையாது. வேலைக் களைப்புடனும், உளைச்சலுடனும் இந்த கடமைகளை கவனித்துத் தான் ஆக வேண்டும் என்பது ஆணாதிக்க சமூக விதி.

வேலையிலிருந்து வீடு திரும்பும் பெண்கள் குழந்தை பராமரிப்பு, உணவு தயாரிப்பு, வீடு துப்பரவு செய்வது, துணி துவைப்பது, கணவனின் தேவையைக் கவனிப்பது என பம்பரமாக சுழன்று கொண்டிருப்பது எங்கெங்கும் காணமுடிகிற அவலம். இந்த உடல் உளச் சிக்கலை அடக்கிக்கொண்டு இயந்திரத்தனமாக வீட்டின் அமைதி சீர்குலையாமல் பேனா வேண்டிய மகா பொறுப்பும் பெண்ணையே சேர்ந்துவிடுகிறது.

எனவே உடற்களைப்பு, உளக் களைப்பு, குறை நித்திரை, நிறை வேளை என தொடரும் பெண்களின் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்படுவது கிடையாது. “அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும்” என்பது பிரசவத்துக்கு சரியாக இருக்கலாம். ஆனால் ஏனைய அனைத்து சுமைகளையும் அவள் மட்டும் சுமக்க வேண்டும் என்கிற நிலை மாற்றப்படக்கூடியது. வேலைப் பகிர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில் சரி செய்யக்கூடியதே. இன்றைய புதிய உலகில் இதில் ஆணாதிக்க நிர்ப்பந்தங்களுக்கு விடை கொடுக்கலாமே.

பெண்களின் வீட்டு வேலையை அளவிடும் பழக்கம் ஆணாதிக்க சமூக அமைப்பில் கிடையாது. அப்படி ஒரு அளவீடு இருந்துவிட்டால் ஆணைகளை விட பெண்கள் எத்தகைய பலசாலிகள் என்பது மட்டுமல்ல எந்தளவு திறமையானவர்கள் என்பதும் அறியக் கிடைக்கும்.

இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். பெண்களில் 60 சத வீதமானோர் தொழிற்படை என்கின்றன தரவுகள். கல்வித் தரத்திலும், அளவிலும் பெண்களின் வளர்ச்சி அதீதமாக வளர்ந்திருப்பதையும் அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் சகல தளங்களிலும் அதிகாரத்தில் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே உள்ளனர்.

பெண்கள் செலவிடும் நேரம், அவர்கள் செலுத்தும் உழைப்பு, விரயமாக்கும் சக்தி என்பவற்றின் பெறுமதியை உணரும் சமூகமாக நமது சமூகம் இல்லை.
எனவே தான் இன்னமும் நமது பெண்கள் “சும்மா வீட்டில் இருக்கும் பெண்களாக” கணிக்கப்படுகிறார்கள். தாமும் உழைக்கும் பெண்களே என்று தார்மீகத்துடன் நெஞ்சு நிமிர்ந்து கூற அவர்களுக்கு வழி சமைக்கப்படவில்லை.

பெண்களையும் தனக்கு சமமான மனித ஜீவியாகவும், தனக்கு நிகரான அத்தனை உணர்வுகளும் உள்ள சக தோழியாகவும் நடத்தும் உலகமே அற்புதமான உலக்கெனலாம்.

நன்றி - தினகரன் 26.02.2017