புதன், 9 செப்டம்பர், 2020

பெண்களின் அரசியல் ஈடுபாடுகளுக்கு ஆண்களே தடை! | உமாச்சந்திரா பிரகாஷ்

செப்டம்பர் 09, 2020 0

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய மூன்று ஊடகத்துறையிலும் முக்கிய பதவிகளில் சேவையாற்றி, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில்  லங்கா சுதந்திர கட்சியில் தெரிவாகிய ஒரே தமிழ் பெண் உமாச்சந்திரா பிரகாஷ். ஊடகத்துறையில் தன்னை ஒரு தனி ஆளுமையாக வளர்த்துக் கொண்டவர். மூன்று துறைகளிலும் உயர் பதவிகளை வகித்தவர். ஊடகத்துறை தந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் அவரை அரசியலில் ஈடுபட ஆளுமை வழங்கியதாக கூறும் அவர், ஊடகப் பாசறை பெண்களின் ஆளுமை விருத்திக்கு அனைத்து வழிகளிலும் உற்சாகத்தை வழங்கக் கூடியது என்கிறார்.
உங்கள் சுய விபரங்களுடனான சிறு அறிமுகம் 
எனது பெயர் பிரகாஷ் உமாச் சந்திரா, சொந்த ஊர் மட்டுவில் வடக்கு சாவகச்சேரி. முதல் நிலை பள்ளி படிப்பு மட்டுவில் சந்ரமோசா வித்தியாலயம், அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். யுத்த சூழ்நிலை காரணமாக எங்களுக்கு 1996ம் ஆண்டு கொழும்புக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. அதன் பின்னர் கொழும்பில் க.பொ.த. உ\த கற்றேன். பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்த மாணவர்கள் என்பதால் பாடத்திட்டங்களை சரியாக பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தொழில்துறை பிரவேசம் பற்றி?
முதன் முதலாக 2001ம் ஆண்டு சக்தி வானொலியில் அறிவிப்பாளராக சேர்ந்தேன். அங்கு 2001--2009ம் ஆண்டு வரை பணியாற்றினேன். 2009ம் ஆண்டு அங்கிருந்து விலகி செல்லும் போது மூத்த நிகழ்ச்சியாளராக இருந்தேன். அதன் பின் 2009ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் உதவி ஊடக முகாமையாளராக சேர்ந்தேன். வீரகேசரியில் வேலை செய்யும் போது மூத்த ஊடகவியலாளரான அன்னலக்ஷ்மி ராஜதுரையின் வழிகாட்டல் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்பில் தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு பாரம்பரியங்கள் பற்றி அதிகமாக எழுதினேன். அதையே என் குறிக்ேகாளாக கொண்டு முன்னெடுத்தேன். 

அக்காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரத்தினத்துடன் இணைந்து தமிழர் தொல்லியல் தொடர்பான ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டேன். அந்த அனுபவங்கள் என்னை ஓர் உயர் நிலைக்கு இட்டுச் செல்ல வழியமைத்தது எனலாம். மீண்டும் 2013ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் செய்தி முகாமையாளராக பதவியேற்று அதில் இரண்டு வருடங்கள் கடமை புரிந்தேன். அப்போது என் தந்தையின் சுகவீனம் காரணமாக செய்திப் பிரிவிலிருந்து நிகழ்ச்சி பிரிவுக்கு மாற்றலானேன். கடந்த டிசம்பர் மாதம் வரை சக்தி தொலைக்காட்சியில் சக்தி டிவி முகாமையாளராக கடமையாற்றினேன். அதன் பிறகு சில காலம் வீரகேசரி இணையத்தளத்தில் செய்தி ஆசிரியராக இருந்தேன். அக்காலப்பகுதியில் எனது யாழ். மண் இணையத்தளம் இரண்டு முறை சிறந்த இணையத்திற்கான விருது பெற்றது. நான் பதினாறு வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றினேன். அதுமாத்திரமன்றி மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளேன். 'பெட்டகம், கலைகேசரியில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அடுத்து 'நல்லூர் கந்தசுவாமி பெருங் கோயில்' என்ற ஆவணப் புத்தகம் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது.
உங்கள் அரசியல் பிரவேசம்...?
25% பெண் பிரதிநிதித்துவ அறிமுகத்தோடு நிறைய கட்சிகள் என்னிடம் கேட்டனர். ஆனால், எனக்கு ஓர் ஆசை அல்லது ஆதங்கம் இருந்தது. யுத்தம் முடிவடைந்து விட்டது, எம் இனம் 30 வருடங்களாக அனுபவித்த துன்பங்களை களத்தில் இருந்து நேரடியாக அனுபவித்தவள் என்பதால், எமது இளம் சந்ததியினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உறுத்தல் இருந்தது. யுத்தம் முடிந்து விட்டாலும்  எமக்கு எந்த பலனும் கிட்டவில்லை. நாம் இன்னும் கடந்து வந்த பாதையையே உற்று நோக்காமல் மாற்று வழிகளை நோக்கி செல்ல வேண்டும். அந்த மாற்று வழிகளில் எமது சந்ததியினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யாரிடம் உதவியை பெறலாம், எது எமக்கு சாத்தியமாகும் என்ற எண்ணத்தில் தான் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன். ஆனால், சிலர் என்னை விமர்சித்தனர். தேசிய கட்சிகள் எமக்கு எதையும் செய்யப் போவதில்லை. இனவாதமே மிச்சம் என்றனர். எனவே என் பார்வையில் ஜனாதிபதி நல்லாட்சியை கொண்டு செல்லும் விதம்  மேன்மையாக இருந்தது. ஊழலுக்கு எதிரான அவரின் போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது. பிரதமர் கூட பிணை முறி மோசடியில் பேசப்பட்டவர். நல்லாட்சி நாயகனுடன் இணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற நினைத்தேன், நடந்து விட்டது. 
நீண்டகால ஊடகத்துறை அனுபவம் உங்கள் அரசியலுக்கு எவ்வாறு உதவியது?
தன்னம்பிக்கையும் ஊக்கமும் எனக்கு ஊடகம் தந்த இரு கவசங்களாகும். ஆனால், அரசியலில் ஈடுபட்ட சில நாட்களில் எனது வாகனம் தாக்கப்பட்டது. அரசியலில் இருக்கும் எந்த ஓர் ஆணும்  பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்பது பட்டவர்தனமாக தெரிந்தது. 16 வருட ஊடகத்துறை அனுபவம் அதையெல்லாம் தாண்டி செல்ல மனவலிமையை தந்தது. அதேபோல் சாதாரண ஒரு பெண்ணிடம் இதையெல்லாம் தாங்கி, தாக்குபிடிக்கும் மனவலிமை இருப்பதில்லை. பெண்கள் சார்பாக பேசுவதற்கு பெண்கள் தான் முன்வர வேண்டும். எந்த  ஓர் ஆணும் அரசியலில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கூறுவதில்லை. இப்படியான பிரச்சினைகளை கடந்து வர பெண்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும். இவற்றை எனக்கு ஊடகத்துறை அனுபவம் தந்தது. 

தனியே வெளியே செல்வது, பல பேரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகியவை எனது அரசியலுக்கு பக்க பலமாக இருந்தது எனலாம். எந்த ஒரு விடயத்துக்கும் அடி பணிந்து போகக் கூடாது. (உதாரணத்திற்கு பாலியல் தொல்லைகள்...) எதிர்த்து நிற்க வேண்டும். பயப்படாமல் போராட வேண்டும். அப்போது  தான் எங்களை நாங்களே பாதுகாத்து கொள்ளலாம்.

பெண்கள் தமது நேரங்களை பொன்னான நேரங்களாக்கி கொள்ள வேண்டும். அரசியலில் மாத்திரமல்ல எந்த துறையிலும் அது இருக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு சில குணாம்சங்கள் இருப்பதாக சொல்வார்கள். பொறாமை, புறம்பேசுதல், இதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்படும் போது (உ-ம்) திறமையான ஒரு பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு பாலின வேறுபாட்டால் ஆணுக்கு வழங்கப்படுகிறது. பெண் திருமணம் முடித்து குடும்பமானால் இவ்வாறான வேலைகளை செய்ய முடியாது. இதனால் பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள். அவள் தன் மன குமுறல்களை இன்னொரு பெண்ணிடம் சொல்லும் போது அவை பொறாமை, புறம் பேசுதலாக உருவெடுக்கிறது.
பெண்களின் கோட்டாவிலே பிரதேச சபை உறுப்பினராக வந்துள்ளீர்கள். பெண்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
பெண்கள் கோட்டாவில் நான் வரவில்லை. கொழும்பு கிழக்கு தொகுதியில் லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அதிகூடிய வாக்குகள் பெற்றுள்ளேன். எனவே இவர்களுக்கு கிடைத்த விகிதாசார முறையில் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஓர் ஆசனம் என்ற ரீதியில் வழங்கினார்கள். அதில் ஜனாதிபதி தலைமையில் அமைத்த குழுவினரின் பரிந்துரையின் கீழ் கொழும்பு தமிழ் பேசும் பெண்களை பிரதிநிதித்துவம் செய்பவராக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பில் வாழும் பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

எனவே கொழும்பு மாவட்டம் முழுவதும் பெண்களையும் நலிவுற்ற பெண்கள், கணவனை இழந்து வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இவை தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தான் என்னுடைய இலக்காக இருக்கின்றது. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு கிடைக்கக் கூடிய வளங்களை நான் சரியாக பயன்படுத்துவேன். அந்த நிதி உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். இதற்காக நான் நேரடியாக அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தொலைபேசி இலக்கத்துடன் அவர்கள் என்​னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம். இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது. அதனால் ஒரு ரூபாவாக இருந்தாலும் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அது என்னுடைய ஒரு கொள்கையாக நான் கருதுகிறேன். நாங்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது எங்களுக்குள் நாங்களே பேசிக் கொண்ட விடயம் 60 உறுப்பினர்கள் செய்யாத வேலையை நாங்கள் 12 பேர் இந்த நான்கு ஆண்டுகளுக்குள் செய்து முடிப்போம் என்று திடசங்கற்பம் கொண்டோம். நாங்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியை பிரித்துக் கொண்டு எங்களால் முடிந்த விடயங்களை இயலுமானவரை செய்வது என்று முடிவு எடுத்துள்ளோம். 
பெண் பிரதிநிதித்துவம் இம்முறை தேர்தலில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? இனிவரும் காலங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?
இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் நிறைய பெண்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில சபைகளில் 25% நிரூபிக்கப்படாவிட்டாலும் கணிசமான பெண்கள் தெரிவாகியுள்ளனர். குறிப்பாக கூறுவதென்றால் 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பெண்களை பொறுத்தவரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய முக்கியமான ஒரு தேர்தலாகும்.

இன்னும் நான்கு வருடங்கள் இருப்பதால் இந்த மாற்றத்தை ஏனைய பெண்கள் முன்னுதாரணமாக கொண்டு அடுத்த தேர்தலில் அவர்களினுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன். அதே நேரத்தில் கட்சிகளும் இந்த சட்டத்தை  கடுமையாக அமுல்படுத்தும் பட்சத்தில் பெண் வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டிய சூழலில் நாங்களும் அவர்களுடன் கட்டாயமாக இருப்போம். எனவே இந்நாட்டில் ஆளுமை மிக்க பெண்கள் பலர் பல்துறையை சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த சட்டம் கொண்டுவரப்படாத காரணத்தால் இலங்கையில் தொடர்ச்சியாக ஆண்களினுடைய ஆதிக்கத்தில் பெண்களுக்கு அரசியலில் குறைந்தளவான பங்களிப்பு தான் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா அம்மையார் இவர்கள் போன்ற ஆளுமைகள் இருந்த நாட்டில் பெண்களினுடைய அரசியல் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. 

கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நான் தமிழ் பேசும் பெண்களிடம் சென்று அவர்களினுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப் போகிறேன். அவர்களுடன் தான் தொடர்ந்தும் இருக்கவும் போகிறேன். அப்பொழுது அவர்களில் பல்துறை சார்ந்த ஆளுமை மிக்க பெண்களை நாங்கள் அடையாளம் கண்டு அவர்களை கட்சிக்கு அறிமுகப்படுத்துவதன் ஊடாக அடுத்து வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடக் கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கலாம். அதுவும் தமிழ் பேசுகின்ற பெண்கள். அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் தமிழ் பேசுகின்ற பெண்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு என்னால் முடிந்ததை செய்வேன்.  எனவே பெண்களாகிய நீங்கள் வெற்றி பெற்ற பெண்களை முன்னுதாரணமாக கொண்டு, உங்கள் ஆளுமைகளை வளர்த்து அரசியலில் உங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு தடையாக இருப்பது எவை என கருதுகிறீர்கள்?
முதலாவது தடை ஆண்கள். ஏனென்றால் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது ஆண்கள். கட்சிகளின் உயர் பதவிகளில் இருக்கும் ஆண்கள் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. 

அவர்கள் பெண்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் பெண்களை தங்களுக்கு வேலை செய்யக் கூடிய ஒருங்கிணைப்பாளராகவோ, மக்களினுடைய தொடர்பாடல் அதிகாரியாகவோ வைத்துக் கொண்டு அந்த மக்களினுடைய வாக்குகளை பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டு பெண்களுக்கு ஆசனங்களையோ, அரசியலில் அங்கீகாரத்தையோ கொடுப்பதில்லை. ஊடகம் மட்டுமல்ல எந்தத் துறையில் இருந்தாலும் அரசியலுக்குள் பிரவேசிப்பது கஷ்டமான காரியம். 
இனி வரும் காலங்களில் உங்கள் முன் இருக்கும் சவாலாக எதை கருதுகிறீர்கள்? 
என்னை பொறுத்தவரை ஊடகம் குடும்பம் இரண்டையும் சமமாக கொண்டு சென்றேன். இனிவரும் காலங்களில் அது மூன்றாக போகிறது. எந்த சந்தர்ப்பத்திலும் நான் எனது ஊடகப் பணியை நிறுத்தப் போவதில்லை.  
இந்த மூன்று விடயங்களையும் சமமாக கொண்டு செல்ல என்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். என் கணவரின் முழு பங்களிப்பு இருப்பதால் என்னால் தொடர்ச்சியாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நியாயமான ஊழல் அற்ற அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது தலையாய கடமையாக கருதுகிறேன். நான் ஒரு ஊடகவியலாளராக அநேக அரசியல்வாதிகளிடம் நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறேன். சில குறைகளை நீங்கள் சரியாக நிறைவேற்றவில்லை, ஊழல் நடந்துள்ளது என்று. அவர்களின் குற்றங்களை சுட்டிக்காட்டிய நான்  அவர்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். சேவையாற்ற கூடிய அரசாங்க கட்சியில் இணைந்து சேவை செய்தாலே மக்கள் குறைகளை தீர்க்க முடியும். பசியுடன் இருப்பவர்களிடம் நல்லிணக்கம்  பேச முடியாது. முதலில் அவர்களின் பசியை போக்குவோம். பெண்களின் நிர்வாகம் நேர்மையானது. வீறு நடைபோட்டு வெற்றி காணுவோம்!

தினகரன் - 01.04.2018

மலையக பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பேன்! - அனுஷா சந்திரசேகரன்

செப்டம்பர் 09, 2020 0
மலையக மக்கள் முன்னணியின் உயர் பீடத்துக்கு நியமிக்கப்பட்ட மறைந்த அக்கட்சியின் தலைவர்  சந்திரசேகரனின் புதல்வி  சட்டத்தரணி அனுஷாவுடன் சட்டத்தை தவிர்ந்த ஓர் சமூக சம்பாஷணை.
உங்கள் அரசியல் பிரவேசம் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?
என் தந்தை அமரர் பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் என்பதை யாவரும் அறிவர். என் தந்தையார் மலையக மக்களின் மீது பேரன்பு கொண்டவர். மலையக சமூகத்தில் அதிக பற்றுக் கொண்டவர். அவர்களின் அடிப்படை தேவைகளையும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை காண்பதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வாழ்வையே மலையக மக்களுக்காக அர்ப்பணித்தவர்.

மலையகத்தில் தொழிற்சங்க அரசியலை மாத்திரமே செயற்படுத்தி கொண்டிருந்த மலையக அரசியல்வா திகளில் வேறுபட்ட கொள்கைகளை வகுத்து புதியதொரு மலையகத்தின் எழுச்சிக்காக வித்திட்டவர். தொலைநோக்கு பார்வையுடன் அவர் மலையக மக்களுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையில் இறையடி சேர நேர்ந்தது. அவருடைய இழப்பே எனக்குள் பாரிய மாற்றத்தை உண்டு பண்ணியது என்றே கூற வேண்டும். அவருடைய இறுதி சடங்குகளில் கலந்து கொண்டவர்கள் அவரை அண்ணா, மகனே என்று விளித்தது என் மனதை கலங்கச் செய்தது. என் உறவுகளை அனைவரையும் இனங்கண்ட நாள் அன்றைய தினமே. என் தந்தையின் உறவுகளை அன்போடும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தும் அவர்களை அரவணைப்பதையே இலக்காக்கினேன். என் தந்தையின் இழப்பின் பின்னரே அவருடைய கொள்கைகளையும் மக்கள் பணியினை மேற்கொள்ள வேண்டும், முன்னெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் ஏற்பட்டது. என்னுடைய அரசியல் பிரவேசமானது என் தந்தையின் ஆதரவாளர்களுக்கும் எம் மலையக மற்றும் தமிழ் மக்களுக்காகவுமே ஆகும். என் தந்தையின் சேவைகளை, வேலைத் திட்டங்களை அவரைப் போலவே கொள்கைகள் வகுத்து சிறந்த முறையில் கொண்டு நடாத்த வேண்டுமென்பதே என் இலட்சியமாகும்.

மேலும் மலையக பெண்களின் அரசியல் தொழிற்சங்க ஆதிக்கம் வலுவிழந்துள்ள நிலையில் என்னுடைய பிரவேசம் பெண்களை அணிதிரள செய்யவும் மலையக பெண்களின் தேவைகளை ஒரு பெண்ணாக பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்குமென நம்புகின்றேன். மலையக பெண்கள் முன்பிருந்தே ஒரு கட்டுப்பாடான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மலையக அரசியலில் ஆர்வம் இருக்கின்ற போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. வீணான கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து எம் மலையகத்துப் பெண்கள், இளைஞர், யுவதிகள் அனைவருக்கும் என் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றேன்.
அப்பாவின் அனுபவங்களில் அறிந்து கொண்டவை?
என்னுடைய தந்தை எனக்கு முதன்முதலாக சொல்லிக் கொடுத்த பாடம் அன்பு. என் தந்தை அவரின் ஆதரவாளர்களிடமும் அவரின் கருத்தை ஏற்க மறுத்தவர்களிடமும் அன்புடனேயே நடந்து கொள்வார். அதுவே நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். மேலும் என் தந்தை இறக்க இரண்டு நாட்களின் முன் சட்டக்கல்வியின் முக்கியத்துவத்தையும் மலையக மக்களுக்கு சட்டத்துறையினூடாக செயலாற்றக்கூடிய விதம் என்பன குறித்தும் என்னிடம் கலந்துரையாடினார். ஆகவே அவர் இறந்த பின்னர் வைத்தியதுறையில் எனக்கிருந்த நாட்டம் போக சட்டத்துறையில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது. மேலும் உழைப்பாளர்களை போற்றி மதிக்க வேண்டும் துணிந்தும் உறுதியாகவும் எக்காரியத்தையும் செய்ய வேண்டும். எத்தனைமுறை விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும், மற்றும் நம்மவர்களுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும் போன்ற படிப்பினைகளை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
அம்மா எப்படிப்பட்ட வழிகாட்டியாக உங்கள் அரசியலில் திகழ்கிறார்?
தந்தையின் திடீர் மறைவால் தலைமைத்துவம் இழக்கப்பட்ட கட்சியையும் கொள்கைகளையும் அந்த வீச்சோடு நகர்த்திச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட என் தாயார் குடும்ப சுமைகளுடன் கட்சியையும் பொறுப்பேற்று வைராக்கியத்துடன் அரசியலில் பிரவேசித்தவர். இதேபோல் 1990ம் ஆண்டளவில் என் தந்தை சிறைவாசம் அனுபவித்த போதும் என் தந்தைக்காக மேடைகளில் பிரசாரம் செய்தவர் என் தாயாராவார். பெண்மையில் உள்ள வீரத்தையும் துணிச்சலையும் என் தாயாரிடம் காண்கின்றேன்.
இதுவரை மலையகத்தில் அரசியல் கட்சியின் தலைமைத்துவத்தில் பெண்கள் இருந்ததில்லை. உங்கள் அம்மா மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் இருந்த வரை சாதித்தது என்ன?
நீங்கள் கூறியது போலவே மலையக அரசியல் கட்சிகளில் பெண் தலைமைத்துவத்தை என் அம்மாவே முதன்முதலாக வகித்தார். கணவனை இழந்த பெண் நிறைய இன்னல்களை சந்திப்பது வழக்கமாகும். மேலும் குடும்பச் சுமையும் அவருக்கு தடையாக இருந்தது.

இத்தகைய பல இன்னல்களுக்கும் குடும்பச் சுமைகளுக்கும் மத்தியில் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர் கொண்டார். இருப்பினும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நம்பிக்கையூட்டி வழிநடாத்தினார். ஜனாதிபதி ஆலோசகராக பல வேலைத் திட்டங்களையும் மேற்கொண்டார்.  மலையக மக்கள் முன்னணி எழுச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதற்கு என் தாயாரின் பங்களிப்பும் பாரியதாகும்.
சட்டம் கற்ற நீங்கள் கட்சி சார்பில் இன்றைய புதிய அரசியல் யாப்பில் மலையகத்துக்கான குறிப்பாக மலையகப் பெண்களின் முன்னேற்றம் குறித்த அம்சங்கள் எவற்றை முன்மொழிந்தீர்கள்?
புதிய அரசியலமைப்பு குறித்த முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. மலையக மக்களினது அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பில் உள்ளடக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை பலரும் முன்வைத்துள்ளனர். பெரும்பாலானவை நியாயமான
அவசியமான கோரிக்கைகளாகவே உள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இவ்வரசியலமைப்பு அமைய வேண்டும் என்பது என் கோரிக்கையாகும்.
ஒரு வழக்கறிஞராக மலையக சமூகத்துக்கு எத்தகைய பணியினை முன்னெடுக்க உள்ளீர்கள்?
ஒரு வழக்கறிஞராக எவ்வித பிரச்சினைகளுக்கும் சட்டத்தின் உதவியை அணுக முடியுமென எண்ணுகிறேன். ஒரு நாட்டின் பிரஜைகள் சட்டத்தினாலேயே ஆளப்படுகின்றார்கள். உரிமைகள் தொடர்பான முரண்பாடுகள் சட்டத்தினாலேயே தீர்க்கப்படுகின்றது. ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு பக்கச்சார்பற்ற நீதியை வழங்குவது சட்டத்தின் பணியாகும். நாட்டில் நீதித்துறையின் பங்கு இன்றியமையாததாகும். எம் மக்களின் அடிப்படை உரிமைகள், இன்னல்கள், உரிமை மீறல்கள் போன்றவற்றை சட்டத்தினால் சீர்படுத்தும் பணியினை முன்னெடுக்க உள்ளேன். நிச்சயமாக மலையக மக்களுக்கு பயனுள்ள வகையில் சட்டக் கல்வியை பயன்படுத்துவேன்.

என் தந்தையின் புதிய மலையகத்திற்கான கனவை நனவாக்க உங்கள் அனைவரினதும் ஆதரவும் அன்பும் என்னென்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என முழுமையாக நம்புகின்றேன்.

தினகரன் - 19.02.2017

"சொல்வதை செய்தாலே பெண்களுக்கு பெரும் விடயம்" | நளினி ரட்ணராஜா, உமா சந்திரா

செப்டம்பர் 09, 2020 1
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளில் மந்த நிலை இருக்கிறதென்பது ஜனநாயகவாதிகளின் பெரும் கவலையாக இருக்கிறது. பிரிட்டிஷ் காலணித்துவ கால எச்சசொச்சங்களோடு நமது பாராளுமன்றமும் இயங்குகிறது. மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டுவந்த நமது பெருமை மிகு பாராளுமன்றத்தின் அதிகார வரம்பில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களால் சற்று தளம்பல் நிலை ஏற்பட்டதென்பதை அரசியல் ஆய்வாளர்கள் மிகவும் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து west minister முறைதான் நடைமுறையில் இருந்தது.

இதனை 'அமைச்சரவை அரசாங்க முறைமை' என்று தமிழில் கூறமுடியும். பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கே நிறைவேற்று அதிகாரம் இருந்தது. ஆனால், 1978 இல் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் ஜனாதிபதியிடமே அதிகாரத்தை வழங்கியது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்ததோடு, பாராளுமன்றத்துக்கு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருடைய கருத்துக்கள் நாட்டின் யதார்த்தத்தை புரிய வைத்திருக்கிறது. வினைத்திறன் இழந்து கிடக்கும் பாராளுமன்றத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகிறார். சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்கள். பாராளுமன்றத்தை செயல் திறனாக்க பெண்களின் எண்ணிக்ைக அதிகரிக்க வேண்டுமென்பது அவருடைய நிலைப்பாடு.

இக் கருத்தை சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் ஊடகவியலாளர்களும் உளமார வரவேற்கின்றனர். இது தொடர்பில் பெண் உரிமை ஆர்வலர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது... 

உமாசந்திரா பிரகாஷ்
ஊடகவியலாளர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் ஜனாதிபதியின் யோசனை வரவேற்கத்தக்கது.

ஒரு மாநகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு வினைத்திறனான உறுப்பினராக செயலாற்றுவதற்கான வழிகாட்டலையும் அதற்கான தலைமைத்துவத்தையும் கொடுத்தது என்னுடைய கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 25% பிரதிநிதித்துவ சட்டத்திருத்தம் இலங்கை அரசியலில் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும். 3 வீதமாக இருந்த பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ் அதிகரிப்புக்கு ஏற்ப மிக வினைத்திறனான பெண்களின் அரசியல் பங்களிப்பு இருக்க வேண்டும்.

பொதுவாக கட்சி பேதமில்லாமல் எவருக்கும்  பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விருப்பம் கிடையாது. அரசியல் வரலாற்றில் இதுவரை குடும்ப அரசியலே மேலோங்கியுள்ளது. கணவன் அல்லது தந்தை இறக்கும் பட்சத்தில் அவர்களின் அனுதாப வாக்குகள் அல்லது அவர்களின் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய பணியாகவே பெண்களுடைய அரசியல் பங்களிப்பு இருந்திருக்கிறது. எனவே, இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு மாற்றம் தான் 25 வீதம் சட்டமாக்கப்பட்ட விடயம். எனவே அது எதிர்காலத்தில் எப்படி மாற்றமடையும் என்பது  கேள்விக்குறியே. மாகாண சபை தேர்தல்களிலோ, பாராளுமன்றத்திலோ அந்த 25 வீதம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.  25 வீதத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கி விட்டு மாகாண சபைகளில் அல்லது பாராளுமன்றத்தில் அதை விட குறைவான தொகையை வழங்கும் போது அது பெண்களின் அரசியல் பிரவேசத்தில் பின்னடைவையே ஏற்படுத்தும்.

இதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களினுடைய அரசியல் பிரதிநிதிகளாக பெண்களை தயார்படுத்தவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலப்பகுதியில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக பெண்கள் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் பெண்களை தயார்படுத்துவதற்கான பொறுப்பு அரசியல் சாராத நிறுவனங்கள், அமைப்புகள், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகளிடம் இருக்கிறது. எனவே அவ்வாறான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்தவொரு ஆரம்பப்படி என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்லக்கூடிய ஒரு நிலைப்பாட்டை கொடுக்க வேண்டும்.

பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரையில்  பெரிய விடயமல்ல. ஆனால் பெண்களுக்கான விகிதாசாரம் பேச்சளவிலேயே இருக்கிறது. பெண்களின் அரசியல் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், பொது மக்கள், ஜனாதிபதி, எல்லோருக்கும் இருக்கிறது. எனவே நாம் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றோம்.

நிச்சயமாக   அரசியலில் பெண்களுடைய பங்களிப்பு தொடர்ந்தும் முன்னேற்றகரமாக இருக்க வேண்டும்.

தற்போது பாராளுமன்றத்தில் நடைமுறையில் இருக்கும் விடயங்களை வைத்து ஜனாதிபதி அவ்வாறான ஒரு கருத்தை முன் வைத்திருக்கலாம். ஜனாதிபதியின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்ெகாள்கின்றேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புதாரிகளின் அசமந்த போக்கினாலேயே உள்ளூராட்சி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. ஜனாதிபதியின் கூற்றுப்படி பாராளுமன்றத்தில் 60 வீத பெண்களின் பங்களிப்புக்கு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட வேண்டும். சில நடைமுறை சாத்தியமான விடயங்கள் பேச்சளவில் நின்றுவிடுகிறது. நடைமுறை சாத்தியமாக்கப்படும் போது பல சிக்கல்கள் தோன்கிறது. இவற்றை வெற்றி கொண்டு முன்னோக்கி  செல்ல வேண்டிய  பாரி பொறுப்பு பெண்களிடம் சுமத்தப்பட்டுள்ளது. அதை செய்ய கூடிய சக்தியை பெண்கள் வளர்த்துக் கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.
நளினி ரட்ணராஜா 
சமூக ஆர்வலர், பெண்நிலை சிந்தனையாளர்

1931ம் ஆண்டு வாக்குரிமை பெற்ற காலத்திலிருந்து இன்று வரையும் பாராளுமன்றத்தில் 5.8 வீதத்தை தாண்டி பெண்களின் பங்களிப்பு இல்லை. ஆகவே பெண்களின் பங்களிப்பு அதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதியின் இந்த கூற்றை நான் முழுமையாக வரவேற்கிறேன். உள்ளூராட்சி மன்றத்தில் கொடுக்கப்பட்ட 25% ஒதுக்கீடு கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிலைமை இவ்வாறிருக்கும் போது இது மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் கட்டாயமாக 33 வீத இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்களை ஆசனத்தில் அமரச் செய்ய வேண்டும். அதாவது, தீர்மானம் எடுக்கும் மட்டங்களுக்கும் சட்டங்களை உருவாக்கும் மட்டங்களுக்கும் அதை கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் எல்லாத் தரப்பிலும் எல்லா உத்தியோக மட்டங்களிலும் பெண்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையின் அந்நியச் செலாவணியை 100 வீதம் பெற்றுக் கொடுத்தது தேயிலைத் தோட்ட, இறப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களும் மத்திய கிழக்கிற்கு வேலைக்குச் செல்லும் பெண்களும் தான்.  இவர்கள் தான் இலங்கையின் முதுகெலும்பாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் அரசியல் என்று வரும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  தெற்காசியாவை எடுத்துக் கொண்டால் இலங்கை கடைசியில் இருக்கின்றது. ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷிலும் கூட பெண்களின் பிரதிநிதித்துவம் கூட இருக்கின்றது. இதனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி அவருடைய பதவிக் காலத்தில் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும். அரசியல் யாப்பினூடாக அவருடைய பதவிக் காலம் முடியும் முன்சட்டமாக்குதல் எங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் வரவேற்பையும் தரக்கூடியதாக இருக்கும். இதை ஜனாதிபதி கட்டாயம் உத்தரவாதப்படுத்த வேண்டும். எப்படியென்றால் அரசியல் யாப்பினூடாக சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த 25 வீதத்தையும் 3 மட்டங்களிலும்  பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தினாலே அது ஒரு பெரிய விடயம்.

தினகரன் - 23.09.2019

"பெண்களுக்கு பயத்தை விட தைரியமே அதிகம்" | கெத்ஷி சண்முகம்

செப்டம்பர் 09, 2020 0

ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகின்ற 'ரெமொன் மகசேசே' விருதைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெருமையை கெத்ஷி சண்முகம் பெறுகிறார். 82 வயதான இவர் யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கணவனை இழந்தப் பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த பணிகளை புரிந்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக, குறித்த விருதை வழங்கும் ஃபிலிப்பின்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது. இவ் விருது குறித்து அவரிடம் ஓர் உரையாடலுக்கு சென்ற பொழுது எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எவ்வித சலனமும் இன்றி புன்முறுவலுடன் வரவேற்றார். அவருடனான கலந்துரையாடல்....
பொது சேவையில் உங்களுடைய ஈடுபாடு எப்படி ஆரம்பமானது?
நான் பிறந்து வளர்ந்தது  கண்டியில். எனது கல்வி வாழ்க்கை கண்டி மோப்ரே பெண்கள் கல்லூரியிலேயே நிறைவுற்றது. நான் படிப்பை முடித்த பின்னர், மோப்ரே பெண்கள் கல்லூரி அதிபர் எங்கள் பாடசாலைக்கு வந்து உதவி செய்யுமாறு என்னை அழைத்தார். அந்நேரம் எனது அம்மா இறந்து விட்டார். நாங்கள் தனியாக இருக்க முடியாது அல்லவா. அப்பாவும் வேலைக்கு சென்று விடுவார். நான் அதே வருடமே பாடசாலையில் ஆசிரியராக வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு என்​ைன யாழ்ப்பாணத்துக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்கள். ஆனால் சிறிது காலம் தான் மோப்ரே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினேன். அதன் பிறகு சென் ஜோசப் கல்லூரிக்கு வேலைக்கு சென்றேன்.  அங்கு கடமையாற்றும் போது குழப்படியான பிள்ளைகளை ஒன்று சேர்த்து பாடசாலை முடிந்ததும் அவர்களுக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்துவதை கண்ட ஜோசப் பெனடிக் என்ற பாதர்,  உளவள ஆலோசனை கல்வியை கற்பதற்காக   aquanas இற்கு அனுப்பி வைத்தார். பிறகு குடும்ப கல்வி சேவை ஸ்தாபனத்தில் சேர்ந்து அங்கு குடும்ப கல்வி சேவை திட்டம் என்ற பாடத்திட்டத்தை  படித்தேன்.

அதை படித்த பிறகு ஜோசப் கல்லூரியில் ஆசிரியராகவும் உளவள ஆலோசகராகவும் ஆகவும் பணியாற்றினேன். அக் காலத்தில் திரும்பவும் என்னை சிறப்பு பயிற்சிக்காக வேலூருக்கு அனுப்பி வைத்தார்கள். அப்பயிற்சியை முடித்தவுடன் 87ஆம் ஆண்டு save the children  நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்ததது. அது rebbana என்றொரு நோர்வேஜியன் நிறுவனம். அங்கு வேலை செய்யும் பொழுது எனக்கு முழு பயிற்சி அளிக்க Norway, South Aftica, Nepal, Cambodia ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நான் அவர்களுக்கு பயிற்சியளித்தது மட்டுமல்லாமல் அவர்களிடமும் நிறைய பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டேன். அப்போது இலன்டனிலும் children and violence போர்க்கால சூழ்நிலையில் எப்படி தாய்மார்களுடனும் பிள்ளைகளுடனும் வேலை செய்வதென்று அங்கு ஒரு பயிற்சி அளித்தார்கள். அந்த பயிற்சியை வைத்து தான் rebbana என்னை வடக்கு கிழக்கிற்கு அனுப்பினார்கள்.  கிழக்கில்  தான் நான் முதன் முதலில் தாய்மார்களுடன் போர்க்காலச் சூழலில் வேலை செய்தேன். அதாவது பெண்களுக்கு தான் என்னுடைய வேலைகள் சென்றடைந்தது.

முல்லைத் தீவில் ஒரு பாரிய அடிபாடு நடந்து கொண்டிருக்கும் பொழுது கிட்டத்தட்ட 8 மைல்களுக்குள் நான் அங்கு தான் இருக்கின்றேன். இது எனது போர்க்காலச் சூழலில் வேலை செய்த அனுபவம். சுனாமி நேரத்திலும் எனக்கு வேலை செய்த அனுபவம் நிறையவே இருக்கின்றது.
இப்படியான பணிகளில் தடைகள், இடர்பாடுகள் போன்றவற்றை சந்தித்து இருக்கின்றீர்களா எவ்வாறு அவற்றை கடந்து வந்தீர்கள்?
போர் கால சூழ் நிலையில் தடையில்லாமல் இல்லை. அதே நேரத்தில் அது எங்களுக்ெகாரு சவாலாக இருந்தது. போர்க்கால சூழ்நிலையில் ஒரு எதிர்ப்புகள், நாங்கள் இல்லாமல் போய்விடுவோமா என்று நினைத்து கொண்டு போக முடியாது. எங்களுக்குள்ளே ஒரு மன  வலு தைரியம் தானே பிறக்கும். அந்த சக்தியோடு தான் நாங்கள் அங்கு நுழைகிறோம் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு எல்லா இடங்களிலும் ஒரு விதமான பாதுகாப்பு கிடைக்கின்றது. அந்த பாதுகாப்பு சாதாரண பாதுகாப்பல்ல. அது ஒரு அற்புதமான தருனம். இரண்டு பக்கங்களிலும் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் வாகனத்தில் போய்க் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய வாகனத்தில் பாதுகாப்பாக கொடிகள் பறக்கவிட்டு, மின்குமிழ்கள், போன்றன இருக்கும். அப்படியிருந்து சண்டை நடந்து கொண்டிருக்ைகயில் இராணுவமே எங்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சண்டை முடிந்து நாங்கள் வந்தவுடன் தான் தெரியும் எங்கெங்கு அடிபாடு நடந்தது, எத்தனை பேர் இறந்து போனார்கள் என்று.  சில நேரங்களில் நாங்கள் போகும் பொழுது பாதை வழியே சிலர் காயப்பட்டுக் கிடப்பார்கள். ஆனால் எங்களுக்கென்று ஒரு சட்டம் இருக்கின்றது, இந்த வாகனத்துக்ெகன்று சில நிபந்தனைகள் இருக்கின்றது. ஆண்கள், இராணுவத்தினர் அடிபட்டுக் கிடந்தால் நாங்கள் கொண்டு செல்ல முடியாது. காரணம் யுத்தகாலம். பெண்கள், பிள்ளைகளை மட்டும் தான் ஏற்றிக் கொண்டு செல்லலாம். இதை சொல்வது பாதுகாப்பு அமைச்சு. அவர்களின் சட்ட திட்டங்கள் அட்டையாக எங்கள் கையில் இருக்கும். அப்போது பாதையில் சிப்பாய்கள் அடிப்பட்டு அழுது துடித்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் அவ்வழியில் செல்கையில் அவர்கள் எங்களை நன்றாக திட்டுவார்கள். ‘நீயெல்லாம் ஒரு மனிசியா’ என்று. 

போர்க் காலச் சூழலில் இரண்டு பக்கத்துக்கும் சமநிலையில் வேலை செய்வது சுலபமல்ல. ஏனென்றால் பாதுகாப்பு அமைச்சின் சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும். இரண்டுக்கும் இல்லாமல் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு போவது இலகுவான விடயமல்ல. 
ஒரு பெண்ணாக நீங்கள் யுத்தகாலத்தில் வேலை செய்வது உங்களுக்கு பயமாக இருக்கவில்லையா?
பெண் என்பதால் பயம் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நான் நினைக்கும் அளவுக்கு பெண்களுக்கு பயத்தை விட தைரியமே அதிகம் இருக்க வேண்டும். எல்லோருக்கும் ரிசிலியன்ஸ் என்றொரு பவர் இருக்கின்றது. எதையுமே நாங்கள் எதிர்​கொள்வதற்கு சக்தி உண்டு என்று நான் நினைக்கின்றேன். ரிசிலியன்ஸ் (resilience) பிறக்கும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் அது இருக்கின்றது. நாங்கள் தான் அவர்களை அடித்து அடித்து அவர்களிடமுள்ள ரிசிலியன்ஸை இல்லாமல் செய்கிறோம். எல்லோருக்கும் அது இருக்கின்றது. அதை நாங்கள் தூண்ட வேண்டி இருக்கின்றது. நான் நினைக்குமளவுக்கு பெண்களுக்கு அது கூடுதலாகவே இருக்கின்றது. பிள்ளை பெற்று வளர்ப்பது ஒரு தாயின் கடமை. அது இலகுவானதல்ல. அதை நாங்கள் சுமை சுமப்பது என்று சொல்கிறோம். சுமை என்பது பாரமாக பிள்ளையை தூக்குவது மட்டுமல்ல. அது சம்பந்தமான முழுமையான நன்நிலை பிள்ளைக்கு கொடுப்பதற்கு அவள் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கின்றது. அவ்வளவும் செய்வதற்கு பெண்களுக்கு ஒரு விதமான சக்தி கூடுதலாக இருக்கலாம். அந்த சக்தி தான் என்னையும் அங்கு போக வைத்தது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் எங்களுக்கென்று ஒரு பொறுப்பு இருக்கின்றது அல்லவா. பெண்களை இப்போது சமூகத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெண் உரிமை என்று சண்டை போட வேண்டியிருக்கின்றது. பெண்களை எடுத்துக் கொண்டால் வேலைக்கும் செல்கின்றார்கள், வீட்டு வேலையையும் செய்கின்றார்கள். 
உங்களது இந்தப் பணிக்கு தூண்டுகோலாகவும் வழிக்காட்டியாகவும் இருந்தவர்கள் யார் என்று கூற முடியுமா?
தூண்டு கோலாக இருந்தவர் பாதர் ஜோசப் பெனடிக். என்னை இனங்கண்டு பாதர் மோர்வின் பர்னாந்துவிடம் அனுப்பினார். பாதர் மோர்வின் பர்னாந்து தான் எனக்கு கவ்ன்சலர் பயிற்சி கொடுத்தார். ஆனால் இதற்கு முன்னமே எனக்கு தூண்டு கோலாக இருந்தது எனது தாய். நாங்கள் மலையகத்தில் இருந்த பொழுது எனது தாய் அங்குள்ள தோட்டத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய செல்வார். ஆனால் என் அப்பாவுக்கு அது பிடிக்காது. அவர் ஒரு பெரிய தொழில் செய்தபடியால். ஆனால் அம்மாவுக்கு அப்படி இருக்க முடியவில்லை. அம்மா அவர்களை சென்று சந்தித்து உதவிகளை செய்து கொண்டு தான் இருந்தார். ஒரு வேலை அம்மாவுக்குள் இருந்த அந்த சக்தி தான் எனக்குள் இருந்திருக்கும் என்று சொல்லலாம்.  அதேநேரம் நான் படித்த பாடசாலை மோப்ரே மகளிர் பாடசாலை. அதில் பிரதி அதிபராக தாயம்மாள் டொஸ் என்பவர் இருந்தார். அவர் தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தார். ஏனென்றால் எனது அம்மா சிறுவயதிலேயே இறந்து போனதால் அவர் தான் எனக்கொரு தாயை போல் இருந்தார். இவர்கள் தான் எனக்கு ஒரு முன்மாதிரி என்று சொல்லலாம். அடுத்ததாக எனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை விட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருமே அம்மா எங்களை விட்டு விட்டு அங்கும் இங்கும் செல்கிறார் என்று துன்பப்பட்டதுண்டு.  இருந்தாலும் எனது கணவரும் அன்றிலிருந்து இன்று வரை எனக்கு உதவியாகவே இருந்தார். 
யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீங்கள் பல வழிகளில் உதவியாக இருந்திருக்கின்றீர்கள். இதை பற்றிய உங்களது அனுபவங்கள்? 
அனுபவங்கள் என்று சொல்லும் போது அது துன்பகரமான ஓர் அனுபவம் தான். ஆனால் நான் துன்பப்பட்டு அதற்குள்ளேயே புதைந்து போக முடியாது. நாங்கள் ஒரு மன வலிமையுடன் சென்று அவர்களுடைய வேதனைகளை அறிந்து செயற்பட வேண்டும். அதற்கு நாங்கள் சொல்வது (Peer Counseling) கூர்மையான உளவள ஆலோசனை. விதவை தாய்மார்கள் எல்லோரையும் ஒன்றாக சேர்த்தால் அவர்களே அவர்களுக்குள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை திட்டமிட்டு செய்தோம் என்றால் நான் சென்று அவர்களுடன் உரையாட தேவையில்லை. அதைத்தான் நான் நம்பினேன். இந்த தாய்மார்களுக்கு உதவியது அவர்கள் தங்களுக்குள்ளேயே தலைமைத்துவம் செய்தார்கள். தலைவர்கள் என்று சொல்லும் பொழுது அதில் இரண்டு வகையாக இருந்தார்கள். ஒரு குழு நன்றாக பணம் உழைக்க வேண்டும், ஆண்களுக்கு நிகராக மீன் வியாபாரம் செய்ய வேண்டும், சைக்கிள் ஓட வேண்டும் இப்படியான மாற்று சிந்தனை உடையவர்களும் இருக்கின்றார்கள். அதனால் இதில் எனக்கு ஆரம்பத்தில் மனதுக்கு கஸ்டமாக இருந்தாலும் போகப் போக அவர்களுடைய சக்தி வெளியில் வருவதை பார்க்கின்ற பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருந்தது. இதில் குறைவானவர்கள் என்று நான் யாரையுமே பார்க்கவில்லை. தங்களுக்குள்ளே அமைதியாக அழுது கொண்டிருந்தவர்கள் கூட எழும்பி நடந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களில் பாலியல் ரீதியான பிரச்சினை இல்லாதவர்கள் இல்​ைல என்றும் சொல்ல முடியாது. மறுமணம் செய்தவர்களும் இருக்கின்றார்கள். 
போரில் பாதிக்கப்பட்ட பல தரப்பினர்களில் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? பெண்களா அல்லது ஆண்களா?
கணவனை இழந்த பெண்கள் அதாவது பிடிபட்டோ,  சூடு பட்டோ அல்லது காணாமலாக்கபட்டோ இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உடனே அவர்களின் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வடுக்கள் நீண்டநாட்களாக அவர்களுக்குள் இருக்கின்றது. ஆனால் கூடியளவான நேரம் பிள்ளைகளை பராமரிப்பதற்கு செலவிடுவதால் அவர்கள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறார்கள். சில பெண்கள் இரகசியமாக சொல்லியும் இருக்கின்றார்கள் எவ்வளவோ கஸ்டப்படுத்தினார் பாவம் போய் விட்டார் என்று. இவ்வாறான பலர் இருக்கின்றார்கள். ஒரு பகுதியினரை மாத்திரம் சொல்ல முடியாது.

வாழ்க்கையே ஒரு சாவல். அந்த சவால்களுக்குள் நாங்கள் தான் முடிவெடுக்க முடியாது. 
பெண்களில் பல தரப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் உங்களுக்கு அதிகமான சவால்களை ஏற்படுத்தியவர்கள் யார்?
சவால்கள் என்று சொல்லும் பொழுது நாங்கள் ஓர் ஆய்வு செய்தோம். அடிப்பட்ட போராளிகளை ஓர் இடத்தில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். NCP என்னை அங்கு இரகசியமாக அனுப்பி வைத்தார்கள். girl child soldiers அங்கு சென்று நான் அவர்களுடைய கதைகளை சேகரிக்க வேண்டும். அவர்கள் அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல நிலையிலும் இருந்தார்கள். ஆனாலும் மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டதை ஒரு உளவள ஆலோசகராக என்னால் இனங்காண முடிந்தது. சில பிரச்சினைகளை பார்க்கும் போது அவை மிகவும் ஆழமாக இருந்தது. அதில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. ஒரு பெண் பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டவர். அவர் வெளிப்படையாக பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறார். சிங்களமும் படித்திருக்கிறார். ஆனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இரவில் எழுந்து சுவரை சுரண்டுவார், வலையில் உள்ள ஒவ்வொரு துவாரங்களையும் எண்ணுவார். போய் பார்த்தால் சுவர் எல்லாம் காண் மாதிரி இருக்கும். அவ்வாறு செய்து செய்து நகங்கள் எல்லாம் புண்ணாகியிருந்தது. இந்த கதையை பார்த்து விட்டு வந்த பொழுது நான் மிகவும் வேதனையுடன் அழுதேன். அச் சம்பவத்தை நானே எழுதினேன். ஆனால் அவர் அப்போதும் கூட நல்ல தொழில் செய்து நன்றாகவே இருந்தார்.

என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒரு சவால். வாழ்க்கை என்பது மேடு பள்ளம். என்னுடைய அனுபவம் என்பது இது ஒரு யாத்திரை. அதில் நான் போய் கொண்டு இருக்கின்றேன்.
விருது பற்றி அறிவித்த போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
விருது பற்றி அறிவித்த போது எனக்கு உடனே அதிர்ச்சியாக தான் இருந்தது. பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து கொடுக்கப்படும் விருது அல்லவா. அதை அவர்களிடம் நேரடியாகவே சொன்னேன். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டிருக்கின்றேன். இலகுவாக அவர்கள் என்னை தெரிவு செய்யவில்லை. எத்தனையோ இடத்தில் பல பேர்களை​ைஅவர்கள் நேர்கண்டிருக்கின்றார்கள், இரகசியமாக கேட்டிருக்கின்றார்கள், நேரடியாக சில தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். இவ்வாறெல்லாம் ஆய்வு செய்து தான் என்னை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்று தான் நான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு நிலையில் என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாகத் தான் கருதுகிறேன். என்னுடைய வயதுக்கு இது ஒரு ஆச்சரியமான விடயம் என்று என்னால் நினைக்க முடியவில்லை. சில சமயம் விருது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எனக்கு அந்த உணர்வு ஏற்படலாம் என்றும் எனக்குத் தெரியவில்லை. இதனால் தற்போது ஊடகங்கள் மூலம் சில விடயங்களை சொல்வதற்கு எனக்கு வாய்ப்புக்களையும் வசதிகளையும் கொடுத்திருக்கின்றார்கள். எனது அபிலாசைகளை கொண்டு செல்வதற்கு சிலர் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
நீங்கள் இதுவரைக்கும் ஊடகங்களுக்கு சொல்ல முடியாமல் போன, சொல்ல நினைத்த விடயங்கள் ஏதும் உண்டா?
உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்களுக்கு ஒரு சக்தி உண்டு. ஆனால் இப்பொழுது ஊடகங்கள் செய்யக் கூடியது இந் நாட்டினுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கு (reconsilation) பிரச்சினைகளை கொண்டு செல்லாமல் நாட்டை நடு நிலைக்கு கொண்டு வருவதற்கான சக்தி ஊடகங்களுக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ஊடகங்கள் என்று சொல்லும் பொழுது உண்மையை எடுத்துக் காட்டும் ஒரு சக்தி அதற்கு இருக்கின்றது. ஆனால் அது சரியாமல் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்றொரு ஆசை எனக்குண்டு.

தினகரன் - 13.08.2017

சீதா ரஞ்சனி: கருத்துச் சுதந்திர பெண் போராளி

செப்டம்பர் 09, 2020 0

ஊடகத்துறையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சீதா ரஞ்சனி தனது எழுத்தாற்றல் மூலம்  மூன்று தசாப்தகாலமாக  ஊடகச் சுதந்திரத்திற்காக போராடி வரும்  போராளி. இப்போதும் சுதந்திர ஊடகவியலாளராக இருந்து எழுத்தினூடாக தனது ஆழமான கருத்துகளை சமூகங்களுக்கு சொல்லும் இவர், சுகயீனமுற்ற நிலையில் இருக்கிறார். இந் நிலையிலும் தினகரன் வார மஞ்சரியோடு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

நான் புனித பூமியான அநுராதபுரத்தில் பிரிமியன் கொலம்ப என்ற ஊரில் பிறந்தேன். ஊரிலுள்ள அசோக மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றேன். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வைத்து எனக்கு வேறு பாடசாலைக்கு போகும் வாய்ப்பும் இருந்தது. ஆனாலும் நான் போக விரும்பவில்லை. 

அக் காலத்தில் எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட வில்லை. ஆனாலும் நான் சிறுவயதிலிருந்தே நிறைய வாசிப்பதால் எழுதுவதற்கு தூண்டப்பட்டேன். பாடசாலை செல்லும் காலத்திலேயே நான் நினைக்கிறேன் தருணி, சரசவி போன்ற பத்திரிகைகளுக்கும் எழுதினேன். அதைத் தவிர கவிதைகள் எழுதி என் பாடசாலை ஆசிரியர்களுக்கு காட்டுவேன். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆசிரியர் என்னை போட்டி ஒன்றுக்கு கவிதை எழுதும் படி ஊக்குவித்தார். 1972ம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லும் காலம். அந்தக் கவிதை அநுராதபுரத்தில் 1வது இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு தொடர்ந்து கவிதை எழுதத் தொடங்கினேன். அது மட்டுமல்லாது பாடசாலையில் சிறு பத்திரிகைகளுக்கும் எழுதினேன். 1970களில் வானொலிக்கு வர்ணணை செய்தேன். இவ்வாறு தான் சிறு வயதிலேயே எழுத்துத் துறையில் இணைந்தேன். 

நான் நினைக்கின்றேன், அன்றும் இன்றும் எனது வாழ்க்கை எழுத்துத் துறையிலேயே தான் இருந்தது. கொழும்பில் நான் வானொலிக்கு எழுதிக்ெகாண்டிருந்த போது விளம்பரம் ஒன்றில் ரஜரட்ட பிராந்திய வானொலி ஆரம்பமாக விருக்கின்றது என்ற தகவலை அறிந்தேன். அப்போது நான் எனது முதல் சிறுகதையை அதில் உள்ள விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். 1979 ஏப்ரல் 12ம் திகதி ரஜரட்ட வானொலி சேவை ஆரம்பமாகியது. 18ம் திகதி எனக்கு டெலிகிராம் மூலமாக அன்றே ரஜரட்ட சேவைக்கு வரும்படி அழைத்திருந்தனர். அங்கு சென்ற போது நான் எழுதிய சிறுகதையை எனக்கே வர்ணணை செய்யும் படி சொன்னார்கள். பிறகு நான் எழுதிய சிறுகதைக்கும் அதை வர்ணணை செய்ததற்கும் எனக்கு பணம் தந்தார்கள். அப்போது தான் எழுத்தின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதினேன். நான் ஒரு பத்திரிகையாளராக வருவேன் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை என்னிடம் இருந்தது. 

அத்தோடு தொடர்ச்சியாக வானொலிக்கு பல ஆக்கங்களை எழுதினேன். அக்காலத்தில் ரஜரட்ட சேவைக்கும் அதிக ஆக்கங்களை எழுதினேன். என்னுடைய அனைத்து ஆக்கங்களும் ஒலிபரப்பப்பட்டன. சிறுகதை மட்டுமல்ல சிறுவர் நாடகம், வானொலி நாடகம், மகளிர் நிகழ்ச்சிகள் பாடல்கள் கூட நிறைய எழுதினேன். சமூகத்தின் பார்வையில் என் ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மக்களின் உரிமைகள், சமூக பிரச்சினைகளை ஆழமான கண்ணோட்டத்தில் வழங்கினேன். வானொலிக்கு எழுதி கொண்டிருந்த போது ‘விவரண’ என்ற ஒரு சஞ்சிகை தொடங்கியது. அவர்கள் என்னை கொழும்பில் வந்து எங்களுடன் வேலை செய்ய முடியுமா என்று தெரிந்தவர்கள் மூலமாக  அழைப்பு விடுத்திருந்தனர். 1980களில் ‘விவரண’வில் எழுத தொடங்கினேன். இன்று 37 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

சமூகத்திலுள்ள பிரச்சினைகள், உரிமைகள், பெண்களுக்கு நிகழும் அநீதிகள், பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதில் நான் கூடிய அக்கறை கொண்டிருந்தேன். கொழும்புக்கு வந்தவுடன் முற்போக்கு ஊடகத்துறையில் இணைந்து கொண்ட நான் என்னிடமிருந்த சிந்தனைபோக்கு, விருப்பு, வெறுப்புக்கள் போன்றவற்றை நோக்கிச் செல்லும் வழி இன்னும் விரிவடைந்தது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவதை விடுத்து என் நோக்கம் மக்களுக்கு ஒரு சிறந்த நாட்டை வழங்குவதுடன் அந்ததந்தத் துறைகளுக்கு ஊடகத்தால் ஆற்ற முடியுமான என் பங்களிப்பை வழங்கினேன். பல புத்தகங்களையும் எழுதினேன். அதற்காக ஒரு தொழிலை கூட செய்யாமல் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்டேன், செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஜனநாயகம், நல்லாட்சியை ஏற்படுத்த நாம் மும்முரமாக வேலை செய்தோம். மனித உரிமை, மகளிர் உரிமை போன்றவற்றை பாதுகாக்க முன்னிட்டு போராடினேன். முற்போக்கு எழுத்துத்துறை என்பது எங்களது ஒரு உரிமை. உண்மைக்காக போராடும் நிலையாகும். ஒரு தலைமையின் கீழ் நிறுவனத்துக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்வதை எழுதி விட்டு சம்பளம் வாங்குவது என்னால் செய்ய முடியாத காரியமாகி விட்டது. சமூகத்துக்காக, உரிமைக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக முற்போக்கு எழுத்து மூலம் நியாயத்தை தொடர்வேன்..

தினகரன் - 05.03.2017

அரசியல் அதிகாரம் ஆண்களுக்கு மட்டும் தானா? - மங்களேஸ்வரி

செப்டம்பர் 09, 2020 0
அரசியல் என்றால் அது ஆண்களுக்குரியது என்ற மனப்பாங்கில் மாறுதல் உருவாக வேண்டும்

சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர்  20 வருட சட்டத்துறை அனுபவத்துடன்  சமூக சேவையாளராகவும்  மும்மொழித் தேர்ச்சி பெற்ற  மனித உரிமை செயற்பாட்டாளராவார்.  பெண் உரிமை செயற்பாட்டாளராக  சர்வதேச அனுபவமும் வலயமைப்பும் கொண்ட இவர் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டவர்.இவர் டிரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா அமைப்பின் சட்ட ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கான மையத்தின் சட்ட முகாமையாளராக கடமை புரிந்து இலஞ்சம், ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் தொடர்பாகவும் மேலும் இத் தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ள பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக மீண்டெழுக்கு வழங்கிய செவ்வியிலிருந்து,....

? நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெண்களின் வெற்றி வாய்ப்பு மேலும் பலவீனப்பட்டிருப்பதற்கான காரணம். 
முதலில் பெண்கள் வேட்பு மனுவில் உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் என்றால் அது ஆண்களுக்கே உரியது, அரசியலை தாங்களே தான் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட கட்சியின் மனநிலை தான் முக்கியமான காரணம் என்று நான் நினைக்கின்றேன். பல்வேறு கட்சிகளிலும் இந்த நிலைமை இருந்தது. பெண்களை குறிப்பாக வேட்பு மனுவில் உள்வாங்குவதற்கான மனோநிலை கூட அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகத் தான் பிரதான கட்சிகள் பெண்களை தங்களுடைய வேட்பு மனுக்களில் உள்வாங்கவில்லை என்பது முதலாவது காரணம். 
அடுத்த காரணம், அரசியல் கட்சிகளை பொருத்தவரையில் அங்கு தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்கள் இன்மையும் மேலும் பெண்களை ஆதரித்து பேசக்கூடியோர் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் இல்லாமையும் இன்னொரு காரணம். 
?தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டம் உண்டா? 
அரச சார்ந்த கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொருத்தவரையில் பெண்களை உள்வாங்குவதற்கான கட்டமைப்பை கொண்டிருக்கின்றது. இதில் கிராமிய மட்டத்திலிருந்து வட்டார மட்டம், தொகுதி என்று பல்வேறு விதமான கட்டமைப்புகளில் சகல தளங்களிலும் பெண்களை உள்வாங்குவதற்கான ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் இந்த கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி பெண்களை வலுப்படுத்த வேண்டிய ஒரு தேவையும் இருக்கின்றது. இந்த கட்டமைப்பினூடாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பல பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனூடாக குறிப்பாக நான் வசிக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த வரையில் ஒரு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியினைச் சார்ந்த ஒரு பெண் தலைமைத் தாங்குகின்றார். 

ஏனைய கட்சிகளிலும் பார்க்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொருத்தவரையில் பெண்களை உள்வாங்கியிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் அதனுடைய மகளிர் அமைப்பானது கிராமிய மட்டத்திலிருந்து தொகுதி மட்டம் வரைக்கும் ஒரு வலுப்பெற்ற கட்டமைப்பை கொண்டிருக்கின்றது. 
?.அரசியலில் ஈடுபட பெண்களுக்கு இன்றுள்ள தடைகள்.. 
அரசியல் என்பது மிகப் பெரிய பிரச்சினை. இது தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல எனக்குத் தெரிந்த வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட பெண்களுக்கும் இப் பிரச்சினை இருந்தது. உதாரணமாக.. கொழும்பு மாநகர உறுப்பினராக இருந்து பின்பு யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரபிரகாஷ், ஏற்கனவே சுதந்திர கட்சியி உறுப்பினராக இருந்தவர். அதற்கு பிறகு அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டார். அதேபோல், ஹிருணிகா பிரேமசந்திர ஏற்கனவே இருந்த கட்சியில் இல்லாது இம்முறை அவரும் சஜித்தின் தலைமையிலான கட்சியில் போட்டியிட நேர்ந்தது. மலையகத்தைப் பொருத்த வரையில் அனுஷா சந்திரசேகரனுக்கும் அதே நிலை தான். அவருடைய தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சியில் கூட அவருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. எனக்கும் அதே கதிதான். எங்களுடைய பரம்பரையாக வந்த கட்சியில் இடம் கிடைக்கவில்லை. நான் இன்னொரு கட்சியில் தான் போட்டியிட்டேன். மொத்தத்தில் பார்க்கப் போனால் பெண்களை உள்வாங்குவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்று தான் நான் சொல்வேன். 
?பெண் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சிக்கான காரணம்? 
நான் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் 56 வீதமான பெண் வாக்காளர்கள் இருந்தார்கள். ஆனாலும், வாக்களிப்பு வீதம் குறைவு என்று நாங்கள் சொல்ல முடியாது. அரசியல் தொடர்பான கூடுதலான விளக்கம் அல்லது அறிவு கொண்டவர்களாக ஆண்களே தான் இருக்கின்றார்கள். சாதாரணமாக பெண்கள் அரசியல் என்பது ஒரு விடயமாக கருதுவதில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களைப் பொருத்தவரையில் அவர்கள் ஆண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு அரசியல் பேசக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு வெளித்தகவல்கள் கிடைப்பது மிகமிக அதிகம். இவ்வாறான காரணிகளால் சுற்றுச் சூழல் அறிவு, விளக்கம் கூடியவர்களாக ஆண்கள் இருக்கின்றார்கள். பெண்களை பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் அவர்களுக்கு அரசியல் பற்றிய ஒரு தெளிவூட்டும் தேவை இருக்கிறது. ஆனாலும் இம்முறை பெண்கள் அமைப்புகள் பொருத்தவரையில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு போன்ற பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'அவளுக்கு ஒரு வாக்கு' என்கின்ற பிரசாரம். பெண்களுக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னும் கூடுதலான விழிப்புணர்வு பெற வேண்டிய ஒரு கட்டாய தேவை இருக்கின்றது. 
?2020 பொதுத் தேர்தலில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட முட்டுக்கட்டைகள்? 
அரசியலில் எதிர்கொண்ட சவால்கள் என்று நாங்கள் பார்க்கும் போது முதலாவது ஒரு கட்சி அரசியலுக்குள் ஒரு பெண் வேட்பாளராக உள்வாங்கப்படுவதே ஒரு பாரிய சவாலாக நான் பார்க்கிறேன். 

இந்த அரசியல் போட்டியென்பது இது ஆண்களின் உலகம். இதில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நீங்கள் எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே, இந்த போட்டித் தன்மை நிறைந்த ஆணாதிக்க அதிகாரம் கொண்ட இந்த அரசியலுக்குள் பெண்கள் உள்நுழைந்து தங்கள் அரசியலை தக்க வைப்பதென்பது ஒரு பாரிய சவால். 

தேர்தல் தொடர்பான பல்வேறு விதமான பிரசாரத்துக்கான நிதியென்பது பாரிய சவால். சாதாரண மாத வருமானத்தை பெற்றுக் கொண்டு வாழ்கின்ற ஒருவரால் இது முடியாத காரியம். இதற்கு நிதியென்பது பாரிய தடையாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன். இதில் பெண்கள் உள் நுழைவதற்கு இந்த பிரசார நிதியென்பது பாரிய சவால்.

?தேர்தல் பெறுபேறுகளில் பெண்ணாக பெற்றுக் கொண்ட படிப்பினைகள்,...
'வென்றால் சரித்திரம், தோற்றால் பாடம்' குறிப்பாகச் சொல்லப் போனால் இதுவரைக்கும் சமூகத்திலும் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தராத ஒரு பாடத்தை இந்த அரசியல் கற்றுத் தந்தது. அதிலிருந்து நாங்கள் தெரிந்துக் கொள்ளக் கூடிய பல்வேறு மனிதர்களை கற்றுத் தர வைத்தது. 

பல்வேறுபட்ட சமூகக் குழுக்களை நேரில் அனுகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் உண்மையாக அடிமட்ட வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்ற கிராம மக்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால் அரசியல் வெற்றித் தோல்விகளுக்கப்பால் அடிமட்ட மக்களது வாழ்வாதார சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.
?பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக உங்கள் ஆலோசனை? 
புதிதாக தேர்தலில் போட்டியிட விளைகின்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக என்னால் இருக்க முடியும். அவர்கள் தேர்தல் காலத்தில் போட்டியிடும் போது என்னை அணுகும் பட்சத்தில் அது தொடர்பான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும். ஏனென்றால் இதில் கற்றுக் கொண்ட பாடம் என்பது அது மற்றவர்களுக்கு புகட்டக்கூடிய பாடங்கள் பல இருக்கின்றன.

அவற்றை என்னால் செய்ய முடியும். உண்மையில் தேர்தலில் போட்டியிட முன்வருகின்ற எந்தப் பெண்ணுக்கும் நான் ஒரு உந்து சக்தியாக அவர்களுக்கு ஆதரவளிப்பதாக என்னால் செயற்பட முடியும். ஒரு தனி நபராக ஒரு பெண்ணாக என்னால் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களை என்னால் முன்னெடுக்க முடியும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
23-08.2020 தினகரன்